கட்சி பேரு மாத்தி, பத்து தொகுதியில் போட்டி.. 'செல்போனில்' கார்த்திக் பேட்டி!
தேனி: அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அதன் நிறுவனர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
இக்கட்சி ஏற்கனவே நடைபெற்றுள்ள தேர்தல்களில் போட்டியிட்ட பொழுது ஏகப்பட்ட பிரச்சினைகள்,வேட்பாளர்கள் காணமால் போதல், வாபஸாகுதல், டெபாசிட் இழப்பு போன்ற எக்கச்சக்கமான பக்க விளைவுகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இக்கட்சி "நாடாளும் கட்சி" என்ற பெயரில் 10தொகுதிகளில் போட்டியிடப் போவதாக, இதன் நிறுவனரான கார்த்திக் தேனியில் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார்.
பெயர் மாற்றப்பட்ட நாடாளும் மக்கள் கட்சி:
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில தலைவர் எஸ்.சவுந்தரபாண்டியன் தேனியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் பெயர் நாடாளும் மக்கள் கட்சி என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக கட்சியின் நிறுவனரான நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு செல்போன் மூலம் பேட்டி அளிக்க உள்ளதாக கூறினார்.
கார்த்திக்கின் செல்போன் பேட்டி:
இதையடுத்து கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் சென்னையில் இருந்து செல்போன் மூலம் நிருபர்களிடம் பேசினார். அவரது பேச்சு செல்போனில் உள்ள ‘லவுட் ஸ்பீக்கர்' மூலம் நிருபர்களுக்கு கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டம்:
அப்போது கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், சில நடைமுறை பிரச்சினை காரணமாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் பெயர் நாடாளும் மக்கள் கட்சி என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தேனியில் இம்மாதம் இறுதியில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். மார்ச்2-ந்தேதி ராஜபாளையத்தில் மக்களவை தேர்தல் ஆயத்த கூட்டம், மனித உரிமை எழுச்சி சந்திப்பு கூட்டம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மனித உரிமை மறுப்பு, மனித உரிமை பறிப்பு குறித்தும், இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும்விவாதிக்கப்பட உள்ளது.
தேனியில் போட்டியிடும் கார்த்திக்:
வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடாளும் மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் மத்திய சென்னை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். தேர்தல் கூட்டணி அமைவதை பொறுத்து போட்டியிடும் தொகுதிகள் மாற்றம் செய்யப்படலாம். தேனி நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. எங்கள் கட்சிக்கு அனைத்து சாதி, சமுதாய மக்களின் ஆதரவும் உள்ளது.
தேர்தல் கூட்டணி:
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம். இந்த பாராளுமன்ற தேர்தல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். நிலையான இந்தியாவை உருவாக்கும் லட்சியம் கொண்ட கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறினார் கார்த்திக்.