ரூ.742 கோடி சொத்து முடக்கத்துக்கு எதிராக சன் டி.வி. வழக்கு- தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்!!
சென்னை: ரூ 742 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதை எதிர்த்து சன் டிவி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தியாவில் தனக்கு இருந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க கடந்த 2006ம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக வெளிநாடு வாழ் இந்தியர் சிவசங்கரன் சிபிஐ-யிடம் 2011-ல் புகார் கொடுத்தார்.
இதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.டி.எச் நிறுவனத்தில் மேக்ஸிஸ் நிறுவனம் முதலீடு செய்தது என்பது வழக்கு.
இது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன், அவரது சகோதரர் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதேபோல் சட்டவிரோத தொலைபேசி இணப்பகம் நடத்தியதாகவும் கலாநிதி, தயாநிதி மாறன்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து சன் டிவி நிறுவனத்தின் ரூ. 742 கோடி சொத்துகளை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை முடக்கியது. இதை எதிர்த்து சன் டிவி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி எம். சத்தியநாராயணன் முன்பு இவ்வழக்கு கடந்த 3ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சன் டிவி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வாதிட்டார். மத்திய அமலாக்கத் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜரானார்.
சன் டிவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சொத்துகள் அனைத்தும் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராவதற்கு முன்பே வாங்கப்பட்டது என்றும், சொத்துக்களை முடக்கியது சட்டவிரோதமானது என்று வாதிட்டார். இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இருதரப்பு விசாரணையையும் கேட்ட நீதிபதி தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில் இன்று காலையில் இந்த வழக்கில் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பளித்தார்.
வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் நேரடி கட்டுபாட்டில் உள்ளதால் சொத்து முடக்கத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் மனுதாரர் வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.