இன்னும் 2 நாள்தான்.. எல்லாம் சரியாகிவிடும்.. ஏர்செல் அதிகாரி மீண்டும் உறுதி!
குத்தகைக்காரர்களுடன் ஏற்பட்ட சமரசப் பேச்சுக்குப்பின் முழுவீச்சில் செல்போன் டவர்கள் 2 நாட்களில் சீர் செய்யப்படும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : குத்தகைக்காரர்களுடன் ஏற்பட்ட சமரசப் பேச்சுக்குப்பின் முழுவீச்சில் செல்போன் டவர்கள் 2 நாட்களில் சீர் செய்யப்படும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் ஏர்செல் சேவை முடங்கியுள்ளது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : ஏர்செல் நிறுவனத்திற்கு தமிழகத்தில் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். பட்டிதொட்டி எங்கும் ஏர்செல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக ஏர்செல் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளது.
மற்ற நிறுவன தொழில்நுட்பம் போலவே ஏர்செல்லும் டவர்களை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வருகிறது. டவரின் மேல் இருக்கும் உபகரணங்கள் மட்டுமே ஏர்செல்லுடையது, டவரை லீசுக்கு கொடுத்த கம்பெனிக்கும் எங்களுக்கும் நிதிப் பிரச்னை மற்றும் சில சட்டசிக்கல்கள் காரணமாக எங்களுடைய சேவையை முடக்கியுள்ளனர்.
ஏர்செல் நிறுவனத்திற்கும் டவர் நிறுவனத்திற்கும் இடையிலான பிரச்னையில் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. இதனால் சட்ட ரீதியிலான முடிவு காண அவகாசம் தேவைப்படும் என்பதால் சமரச பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறோம்.
இன்று கிடைத்த தகவலின் படி சமரச பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாக உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். அவ்வாறு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததும் 2 நாட்களில் டவர் பிரச்னை சீராகி சேவை தொடங்கப்படும் என்றும் சங்கர நாராயணன் கூறியுள்ளார்.