சென்னை தொழிலதிபருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க 'லுப்தான்சா'வுக்கு உத்தரவு
சென்னை: பிசினஸ் வகுப்பு டிக்கெட்டை எக்கானமி வகுப்பு டிக்கெட்டாக மாற்றியதற்காக லுப்தான்சா விமான நிறுவனம் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கு ரூ.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை லிங்கிசெட்டித் தெருவைச் சேர்ந்தவர் ஷிவ் பிரகாஷ் கோயன்கா(70). தொழில் அதிபரான அவர் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
2010ம் ஆண்டு சென்னையில் இருந்து லுப்தான்சா ஜெர்மன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பிராங்பர்ட் வழியாக ஸ்பெயினில் உள்ள மாட்ரீ்டுக்கு சென்று வர முன்கூட்டியே பிசினஸ் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தேன். நான் பயணம் செய்ய விமானத்தில் ஏறிய பின்தான் 'பிசினஸ்' வகுப்புக்கு பதிலாக எனக்கு 'எக்கானமி' வகுப்பில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
வயோதிகத்தால், நான் நடப்பது சிரமம். சக்கர நாற்காலியை தான் பயன்படுத்தி வருகிறேன். எக்கானமி வகுப்பில் பயணம் செய்வதற்கு உடல்நிலை ஒத்து வராது, முன்பதிவு செய்திருந்த, 'பிசினஸ்' வகுப்பில் தான், எனக்கு இருக்கை வேண்டும் என கேட்டேன். இருக்கைகள் முழுவதும் நிரம்பி விட்டன. நீங்கள், இதே வகுப்பில் பயணம் செய்யுங்கள். மீதி கட்டணம் உங்களுக்கு திரும்ப தரப்படும் என விமான பணியாளர்கள் தெரிவித்தனர்.
விமானம் புறப்பட தயாராக இருந்ததால் மீண்டும் கீழே இறங்குவது சிரமம்; இதனால், மிகவும் சிரமப்பட்டு பயணம் செய்தேன். மன உளைச்சலுக்கு ஆளானேன். உடல்நலமும் பாதிக்கப்பட்டது. எனக்கு உரிய இருக்கை வழங்காத விமான நிறுவனம், டிக்கெட் கட்டணமான ரூ.2.5 லட்சத்துடன் ரூ. 95 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
2 எக்கானமி வகுப்பு டிக்கெட்டுகள் மற்றும் இழப்பீடு வவுச்சரை அவர் ஏற்றுக் கொண்டார் என்று விமான நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்கெட் பணத்துடன், ரூ.20 லட்சம் இழப்பீடை கோயன்காவுக்கு வழங்குமாறு லுப்தான்சாவுக்கு உத்தரவிட்டுள்ளது.