ச.ம.க. சரத்குமார் இனி புரட்சித்திலகம் என்று அழைக்கப்படுவார்…
சென்னை: எனது பெயரை மறக்கடித்து, ‘புரட்சி திலகம்' என்ற பெயரில் அழையுங்கள். அதை மக்கள் மனதிலும் பதிய வையுங்கள் என்று தனது தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார்.
அ.இ.ச.ம.கவின் 9வது ஆண்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு கட்சியில் நிறுவனர்-தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. கட்சி அலுவலகத்தில், கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். விழாவையொட்டி, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சரத்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், தலைமை நிலைய செயலாளர் ஐஸ்ஹவுஸ் தியாகு, அரசியல் ஆலோசகர் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேசிய சரத்குமார், எந்த ஒரு கட்சியும் 8 ஆண்டுகளை கடப்பது என்பது சாதாரண விஷயமல்ல. பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து இத்தகைய சாதனையை நாம் அடைந்திருக்கிறோம்.
மாற்றம் வேண்டும்
‘மாற்றத்தை நோக்கி...' என்பதை வெறும் பெயருக்கு மட்டும் எடுத்துக்கொள்ளாமல் செயலிலும் எடுத்துக்காட்ட வேண்டும்.
நமது கட்சி பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நமது கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு செல்லுங்கள்.
கட்சிக்கொடி பறக்கணும்
உங்கள் ஒவ்வொரு வாகனத்திலும் நமது கட்சியின் கொடியினை பறக்கவிடுங்கள். கட்சிக்கொடியின் நிறம் பொறிக்கப்பட்ட வேட்டிகளை அணியுங்கள். உறுப்பினர் அடையாள அட்டையை எப்போதும் உடன் வைத்திருங்கள்.
புரட்சி திலகம்
எனது பெயரை மறக்கடித்து, ‘புரட்சி திலகம்' என்ற பெயரில் அழையுங்கள். அதை மக்கள் மனதிலும் பதிய வையுங்கள். ஒவ்வொரு தொகுதி வாரியாக நம் கட்சியின் வளர்ச்சியையும், சிறப்புகளையும் தெரியப்படுத்துங்கள். உழைக்காமல் நாம் முன்னேற முடியாது.
அடுத்த முதல்வர்
சமீபத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் அடுத்த முதல்வராக ஜெயலலிதாவை அறிவித்திருப்பது சிறப்பான முடிவு. ஆனால் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதியை விட குறைந்த சதவீதத்தில் முன்னேறி இருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விகிதாச்சார முறையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
விழிப்புணர்வு தேவை
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து 6 பேர் பலியான சம்பவம் என் மனதை மிகவும் பாதித்து விட்டது. இனிவரும் காலங்களில் அந்த பகுதியில் உள்ள நமது கட்சியினர் தன்னார்வலராக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து செல்லுமாறு பயணிகளிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். இனி இதுபோல விபத்து நடக்காமல் பயணிகளும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
உறுதிமொழி
இதனைத்தொடர்ந்து மதுகுடிக்க மாட்டோம் என்று சரத்குமார் தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். இந்த கூட்டத்தில் கட்சியின் சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர், மாவட்ட செயலாளர்கள் சென்னை சி.ராஜா, சி.உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டணி தொடரும்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், அதிமுக உடன் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும். நல்ல கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். விரைவில் எங்கள் தொண்டர்களிடையே கருத்து கேட்கப்பட்டு, ஒரு மாதிரி தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.
தொண்டர்கள் உற்சாகம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை ‘புரட்சித்தலைவி' என்றும் ‘அம்மா' என்றும் தொண்டர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர். அதேபோல, கருணாநிதி ‘கலைஞர்' என்றும், மு.க.ஸ்டாலின் ‘தளபதி' என்றும், விஜயகாந்த் ‘கேப்டன்' என்றும், டாக்டர் ராமதாஸ் ‘மருத்துவர் அய்யா' என்றும் அடைமொழிகளுடன் அழைக்கப்படுகின்றனர். இனி அந்த அரசியல் தலைவர்களின் வரிசையில் சரத்குமார் ‘புரட்சி திலகம்' என்று அழைக்கப்படுவார் என்று சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.