மு.க.அழகிரி உருவ பொம்மை எரிப்பு!: ஸ்டாலின் ஆதரவாளர்கள் போரட்டம்
மதுரை: திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், ஸ்டாலின் குறித்தும் அழகிரி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்திவருகின்றனர்.
ஸ்டாலின் குறித்து தகாத வார்த்தைகளை கூறியதாக, அதனை கண்டித்து மு.க.அழகிரி உருவ பொம்மையை சென்னை, சேலம், கோவை, மற்றும் மதுரையில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் எரித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார். இதுகுறித்து இன்று பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, ''கடந்த 24ஆம் தேதியன்று அழகிரி, என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து, படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் என்னிடம், ஸ்டாலின் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இறந்து விடுவார் என்று உரத்தக்குரலில் சொன்னார்.
எந்த தகப்பனாவது இதுபோன்ற வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியுமா? இருப்பினும் கட்சித் தலைவர் என்ற முறையில் தாங்கிக் கொண்டேன். தகப்பன் என்ற முறையில் அதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை'' என்றார்.
ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
கருணாநிதியின் போட்டியை அடுத்து மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆவேசமுற்றனர். சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் தேனாம்பேட்டை அறிவாலயம் அருகே இளைஞரணியின் தென் சென்னை அமைப்பாளர் சிற்றரசன் தலைமையில் திமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உருவபொம்மை எரிப்பு
ஆர்ப்பாட்டத்தோடு நில்லாமல் மு.க.அழகிரியின் உருவ பொம்மையை தென் சென்னை திமுக இளைஞரணியினர் எரித்து எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அழகிரி போஸ்டர் கிழிப்பு
அழகிரிக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பிய ஸ்டாலின் ஆதரவாளர்கள் தேனாம்பேட்டை பகுதியில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் கிழித்தெறிந்தனர்.
மதுரையில் எரிப்பு
அழகிரியின் கோட்டை என்று கூறப்படும் மதுரையில் கூடல் நகரில் மு.க.அழகிரியின் உருவ பொம்மையை ஸ்டாலின் ஆதரவாளர்கள் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் பதற்றம்
இதேபோல், சேலம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் கிச்சிப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் பிரதீப், கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் வந்த இளைஞர் அணியினர், அழகிரி உருவ பொம்மையை எரித்தனர்.
வேடிக்கை பார்த்த போலீஸ்
அதோடு மட்டுமல்லாது "அழகிரியே! வாயடக்கு. தலைமைக்கும், தளபதிக்கும் கட்டுப்பட்டு நட, அழகிரியை கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் வன்மையாக கண்டிக்கிறோம்.."என்ற கோஷங்களை எழுதி உருவ பொம்மையை எரித்து நெருப்பில் அடித்தனர். காவல்துறை சற்றும் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கோவையில் முழக்கம்
இதேபோல், இன்று மாலை 6.45 மணியளவில் கோவை, சாய்பாபா காலனியில் 11வது வார்டு கவுன்சிலர் ரவி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு அழகிரியின் உருவபொம்மையை எரித்து அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். கோவை உக்கடம் உள்ளிட்ட மேலும் சில இடங்களிலும் அழகிரியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூரில் பதற்றம்
குன்னூரில் அழகிரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர், அவரது உருவபொம்மையை தீ வைத்து எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்