திமுக வேட்பாளர் பட்டியலில் உண்மையான விசுவாசிகள் புறக்கணிப்பு: அழகிரி 'அட்டாக்'
சென்னை: திமுக வேட்பாளர் பட்டியலில், உண்மையான கட்சி விசுவாசிகள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், தனது ஆதரவாளர்கள் யாரும், திமுகவுக்காக தேர்தல் பணியாற்றவில்லை என்றும் கறாராக கூறியுள்ளார், முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான, அழகிரி.
கடந்த 13ம் தேதி திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பெரும்பாலும் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும், கருணாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கும்தான் சீட் கிடைத்ததாக பிற குரூப்புகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரிக்கும், ஆதரவாளர்களுக்கும் பயங்கர அப்செட். தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைக்க முடியாமல் போனதும், அழகிரியை கருணாநிதி தனது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியது, அழகிரி ஆதரவாளர்களை குதூகலிக்க செய்தது.
அழகிரிக்கு கல்தா
இந்த குதூகலம், வேட்பாளர் பட்டியலை பார்த்ததும் மாயமாகியுள்ளது. ஏனெனில், அழகிரியின் முன்னாள் ஆதரவாளர்களான, பி.மூர்த்தி, கோ.தளபதி, ப.தியாகராஜன், ரகுபதி ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதை தவிர்த்து பார்த்தால் வேறு எந்த திருப்தியும் அழகிரி கோஷ்டிக்கு ஏற்படவில்லை.
தேர்விலும் பங்கு இல்லை
வேட்பாளர் தேர்வில் அழகிரிக்கு எந்தவித பங்கும் தரப்படவில்லை என்பதும் அழகிரி ஆதரவாளர்கள் கோபமாக உள்ளது. வேட்பாளர் பட்டியல் குறித்து அழகிரி, ஜூனியர் விகடன் இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதிலுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள்.
விசுவாசிகளுக்கு இல்லை
உங்கள் ஆதரவாளர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லையே? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அழகிரி,
"என் ஆதரவாளருக்கு மட்டுமில்லை, உண்மையான கட்சி விசுவாசிகள் யாருக்கும் சீட் வழங்கப்படவில்லை'' என்று சீறியுள்ளார்.
வேலை செய்யவில்லை
"நான் தலைவரை (கருணாநிதியை) பார்க்கச் சென்றது உண்மைதான். அதற்கும் கட்சியில் இணைவதற்கும் தொடர்பில்லை. என் ஆதரவாளர்கள் யாரும் தேர்தலுக்காக திமுக சார்பில் கட்சி வேலை செய்யவில்லை" என்றும் அழகிரி கூறியுள்ளார்.
அது வேறு, இது வேறு
கருணாநிதியை ஜாதி ரீதியாக விமர்சித்து வைகோ பேசியதற்கு உங்கள் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி, கொடும்பாவி கொளுத்தினார்களே? என்ற கேள்விக்கு, "என் அப்பாவை விமர்சித்ததால் போராட்டம் நடத்தினார்கள். அது வேறு. நான் சொன்னால் என் ஆதரவாளர்கள் எதையும் செய்வார்கள். அந்தப் போராட்டத்துக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை'' என்று தெளிவுபடுத்தியுள்ளார் அழகிரி.
உள்ளுக்குள்ளேயே
திமுக வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் நடுவே கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனால்தான் காலையில் வெளியாக வேண்டிய வேட்பாளர் பட்டியல் மாலையில் வெளியிடப்பட்டது என்று செய்தி வெளியாகியது.
கூட இருப்பவர்கள் குழப்பம்
கட்சியில் என்னை மீண்டும் இணைக்க கருணாநிதிக்கு விருப்பம் உள்ளபோதிலும், உடன் இருக்கும் சிலருக்கு விருப்பம் இல்லை என்று சமீபத்தில் அழகிரி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.