உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும் - சொன்னது பொன்.ராதாகிருஷ்ணன்
ஈரோடு: உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து கட்சியை பலப்படுத்தும் விதமாக மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரோட்டில் இன்று பா.ஜ.கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இருநாட்டு மீனவர்களையும், இருநாட்டு அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வும், மற்றும் அ.தி.மு.க.வும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இப்போது அதுபற்றி பேசிவருவது நியாயமா?
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்கமாட்டோம். தமிழ்நாட்டில் உளவு துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஐ.எஸ். உளவாளி திருப்பூரில் தங்கியிருந்து கடை வைத்து நடத்தும் அளவிற்கு இருப்பது வேதனைக்குரியது. உளவுபடை இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.
கடந்த ஆண்டே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வாய்ப்பு இருந்தும் அதை தமிழக அரசு தவறவிட்டுவிட்டது. அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.
தேமுதிக உள்ளிட்ட எந்த கட்சியையும் பாஜகவுடன் இணைய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் இதேபோல் அனைத்து கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications