இமெயிலை அழிக்கும் அமைச்சர்களுக்கு மத்தியில் ஒரு சபாஷ் கலெக்டர்!
பொதுமக்கள் தங்கள் புகார் மற்றும் குறைகளை செல்போன் மற்றும் ஈமெயிலில் தெரிவிக்கலாம் என்று அறிவித்த மாவட்ட ஆட்சியர் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.
நெல்லை : பொதுமக்கள் தங்கள் புகார் மற்றும் குறைகளை தெரிவிக்க செல்போன் நம்பர் மற்றும் இமெயில் முகவரியை தெரிவித்த ஆட்சியர் பலத்த பாராட்டை பெற்றுள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பு ஏற்றார். அவர் பதவிக்கு வந்தது முதல் மக்களைக் கவர்ந்து வருகிறார்.
முதல் முயற்சியாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக புதர் காடாக காட்சியளித்த பாளையங்கால்வாயை தூர் வாரும் பணியை அண்ணா பல்கலைகழகத்துடன் இணைந்து துவங்கி வைத்தார். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பயன் அடைந்தனர்.
அன்பு சுவர்
தொடர்ந்து தாமிரபரணியை மீண்டும் தூய்மைப்படுத்தும் பணி மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருப்போர் புத்தகங்கள் கொடுக்க, இல்லாதோர் எடுக்க அன்பு சுவர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு பொது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
மக்கள் புகார் கூற வசதியாக
இந்நிலையில் அடுத்த அதிரடியாக சாமானிய பொது மக்களும் ஆட்சியரை எளிதில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் குறைகளை கூறும் வகையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டரா பகுதிகளில் கலெக்டரின் செல்போன் எண், வாட்ஸ் ஆப் நம்பர், முகநூல், டிவிட்டர் கணக்கு, இமெயில் முகவரி போஸ்டராக அடித்து ஓட்டப்பட்டுள்ளது.
குவியும் பாராட்டுகள்
இதன் மூலம் கலெக்டரை பொது மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளலாம். இந்த முயற்சிக்கும் கலெக்டருக்கு பலத்த பாராட்டு கிடைத்துள்ளது. கலெக்டரின் தொடர்பு மூலங்கள் மக்களுக்கு போஸ்டராக அடித்து ஒட்டப்பட்டிருப்பதால் மக்கள் தங்களது பிரச்சினைகளை எளிதில் சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
அமைச்சர்களும் இருக்காங்களே
சமீபத்தில் ஊழல் புகாரை அமைச்சர்களின் இணையதளத்தில் ஆதாரத்துடன் பதிவிடுங்கள் என்று கமல் ஹாசன் கூறியதையடுத்து தமிழக அமைச்சர்களின் இமெயில்கள் வேகமாக அகற்றப்பட்டன. ஆனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் எடுத்திருக்கும் இந்த முயற்சி மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.