ஆளுநர் உரை என்பது அம்மா கால அட்டவணை: ஸ்டாலின் சாடல்
சென்னை: சட்டசபையில் அரசின் உரையையே ஆளுநர் வாசித்தார் என்றும் இது வெறும் அம்மா கால அட்டவணைதான் என்றும் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
15வது சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. ஆளுங்கட்சி, உறுப்பினர்களும், எதிர்கட்சி உறுப்பினர்களும் அமைதியாக அமர்ந்து ஆளுநர் வாசித்த உரையையும், சபாநாயகர் தனபால் வாசித்த உரையும் கேட்டனர்.
நீண்ட காலத்திற்குப் பின்னர் ஆளுநர் உரையை புறக்கணிக்காமல் அவைக்குள் எதிர்கட்சியினர் அமர்ந்து இருந்தனர்.
ஆளுநர் ரோசய்யா 38 பக்க உரையை 38 நிமிடங்களில் வாசித்து நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் அந்த உரையின் தமிழாகத்தை 45 நிமிடங்கள் வாசித்தார்.
அவை நிறைவடைந்த உடன் வெளியில் வந்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அரசின் உரையையே ஆளுநர் ரோசய்யா வாசித்ததாக கூறினார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள்தான் ஆளுநர் உரையில் உள்ளது என்றும், மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் குறிப்பிடவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகளை மீண்டும் திறக்கப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலைகள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்தான் மூடப்பட்டன. இப்போது மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுவது தும்பை விட்டு வாலை பிடிப்பது போன்றது.
அம்மா திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்று கூறியுள்ளனர். அதற்கான நிதி ஆதாரங்களைப் பற்றி விளக்கவில்லை. மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றியும் குறிப்பிடவில்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை என்பது வெறும் அம்மா கால அட்டவணை என்று மு.க.ஸ்டாலின் சாடினார்.
சட்டசபைக்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை தருவாரா என்று ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், சட்டசபையில் உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்குவதில் மரபு கடைபிடிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி வந்து செல்வதற்கு ஏற்ப இருக்கை ஒதுக்க சபாநாயகரிடம் கோரியிருந்தோம் ஆனால் அவர் வந்து செல்வதற்கு ஏற்ப இருக்கை வசதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மே 25ம் தேதி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் வந்து, முன் வரிசையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்தார். இந்த நிலையில், சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு சிறப்பு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது அவர் அமர்ந்திருந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு இரண்டாம் வரிசையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கைக்கு பின்புறம் இரண்டாம் வரிசையில் முதல் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.