நீ போட்ரா பார்க்கலாம்.. கை காலை முறிச்சுப் போடுவேன்.. ஆட்டோ டிரைவரிடம் எகிறிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ
ஆட்டோ டிரைவரிடம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி காட்டமாக பேசியது தொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கவுண்டம்பாளையம்: ஆட்டோ டிரைவரிடம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி காட்டமாக பேசியது தொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை அவினாசி சாலையில் அங்குள்ள கல்லூரி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சவாரிக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திமுகவை சேர்ந்த நடராஜ் வாங்கிய புதிய ஆட்டோவை அந்த ஸ்டாண்டில் நிறுத்த வந்தார்.
இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும், தாங்களே சவாரிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பஞ்சாயத்தை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர், ஆட்டோ டிரைவர் நடராஜை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மிகவும் காட்டமாக பேசியதாக தெரிகிறது. இதனால் நடராஜ், எம்எல்ஏ பேசிய பேச்சை வாட்ஸ் ஆப்பில் பரவவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் கேட்டபோது, வாட்ஸ் ஆப்பில் வெளியானது நான் பேசியதுதான். வீண் பிரச்சினை செய்வோரிடம் வேண்டுகோள் விடுத்து பேசமுடியாது. சில நேரங்களில் காட்டமாக பேசினால்தான் எதிராளிகள் நம் வழிக்கு வருவர்.
அதே நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் நான் பேசியதையும், நடராஜ் பேசியதையும் முழுமையாக வெளியிட்டால் எல்லோருக்கும் உண்மை புரியும். அவர் திமுகவை சேர்ந்தவர் என்பதால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நான் பேசியதை மட்டும் சமூக வலைதளங்களில் உலவ விட்டு வருகிறார் என்றார் அவர்.