மாநில சுயாட்சி அளிக்காவிட்டால் மாபெரும் புரட்சி வெடிக்கும்: மத்திய அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை
மாநில சுயாட்சியை மத்திய அரசு அளிக்காவிட்டால் மாபெரும் புரட்சி வெடிக்கும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம்: மாநில சுயாட்சியை மத்திய அரசு அளிக்காவிட்டால் மாபெரும் புரட்சி வெடிக்கும் என தருமபுரி எம்.பி.யும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியான தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பாமக நடத்தியது.
மாநாட்டு மேடைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
21 தியாகிகளால்...
இந்த மாநாட்டில் எம்.பி. அன்புமணி ராமதாஸ் பேசுகையில் 21 தியாகிகளால்தான் 3 கோடி மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது. தமிழகத்தின் 108 ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு கிடைக்க காரணம் 21 தியாகிகள்தான். விழுப்புரத்தில் கூடிய கூட்டத்தை தமிழகத்தின் எந்த கட்சியாவது கூட்ட முடியுமா?
சுயாட்சிக்கான பரிந்துரைகள்
மாநிலத்தின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டே இருக்கிறது. மாநில சுயாட்சிக்கான ராஜமன்னார், சர்க்காரி ஆணைய பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. மாநில சுயாட்சி தொடர்பாக சர்க்காரி ஆணையம் 247 பரிந்துரைகளை அளித்தது. எம்.எம். பூஞ்சி குழுவும் மாநில சுயாட்சி தொடர்பாக 2010ல் அறிக்கை அளித்தது.
தலையீடு கூடாது
மாநிலங்களிடையே மன்றத்தை அமைக்க வலியுறுத்தியது ராஜமன்னார் குழு. மாநிலங்களுக்கு உடனடியாக சுயாட்சி வழங்க வேண்டும். மாநிலங்களின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையீடு கூடாது. கல்வி உரிமை தமிழக அரசிடம் இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை இந்திரா காந்தி பொதுப்பட்டியலுக்கு கொண்டு போனார். மாநிலப் பட்டியலில் கல்வி உரிமை இருந்திருந்தால் நீட் வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம்.
ஜல்லிக்கட்டு புரட்சி
ஜல்லிக்கட்டு புரட்சி போல மாநில சுயாட்சிக்காக, நீட்டுக்கு எதிராக நடத்தப்பட வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் மாநில சுயாட்சி மிக மிக அவசியம். இந்திராவை விட அனைத்து அதிகாரங்களும் தமக்கே இருக்க வேண்டும் என நினைக்கிறார் மோடி. 11 ஆண்டுகாலம் குஜராத் முதல்வராக இருந்த மோடி மாநில சுயாட்சிக்காக போராடினார். அன்று மாநில சுயாட்சிக்காக போராடிய மோடி இன்று அதிகாரங்கள் தமக்கே இருக்க வேண்டும் என நினைப்பது சரியா?.
புரட்சி வெடிக்கும்
மாநில சுயாட்சி அளிக்கப்படாவிட்டால் மாபெரும் புரட்சி வெடிக்கும். இது சமூக நீதிக்கான அடித்தளமாக இருக்கும் மண். இந்த இளைஞர்களை சாதாரணமாக கருதிவிடாதீர்கள் என எச்சரித்தார் அன்புமணி
உறுதிமொழி
லட்சக்கணக்கானோரை எழுந்து நிற்க வைத்து உறுதி மொழி ஏற்க வைத்தார் அன்புமணி. தமிழகத்தில் நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம்- இது சத்தியம் என உறுதிமொழி ஏற்றனர். மாநில சுயாட்சி எப்படி சமூக நீதிக்கான கருவி என்பதை விளக்கும் ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது.