நான் கூடத்தான் சொல்வேன் பென்ஸ் காருக்கு மானியம் தருவேன்னு.. அன்புமணி அட்டாக்!
சென்னை: ஸ்கூட்டர் வாங்கி மானியம் தருவதாக ஜெயலலிதா கூறுகிறார். ஏன் நான் கூடத்தான் சொல்வேன் பென்ஸ் கார் வாங்கினால் 25 சதவீதம் மானியம் என்று. ஆனால் மக்களால் மீதம் உள்ள 75 சதவீதத்தைப் போட்டு வாங்க முடியுமா.. இதை ஜெயலலிதா யோசித்துப் பார்க்க வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயலலிதா ஸ்கூட்டருக்கு மானியம் என்று சொல்கிறார். நான் கூட சொல்கிறேன். பென்ஸ் கார் வாங்குவதற்கு 25 சதவீதம் மானியம் என்று. மீதி 75 சதவீதம் பணம் மக்களால் செலவழிக்க முடியுமா?
ஸ்கூட்டர் விலை ரூ. 60,000 வரும். 30 ஆயிரம் அரசு தருமாம். மீதமுள்ள 30 ஆயிரம் பணத்தை செலவிடும் இன்று பெண்கள் உள்ளார்களா. கையில் 3000 ரூபாய் கூட இல்லாத நிலையில்தான் பல பெண்கள் உள்ளனர். இது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா.
ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து விட்டு, ஜெயலலிதா இஷ்டத்திற்கு அறிவிப்பு வெளியிடுகிறார். பிச்சை போட்டு, மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருக்க வேண்டும் என்று இரு திராவிட கட்சிகளும் விரும்புகின்றன.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று ஜெயலலிதா சொல்கிறார். தமிழ்நாட்டில், 1 கோடியே 60 லட்சத்து 97 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் எப்படி அரசு வேலை கொடுக்க முடியும். ஏனென்றால் இங்கு இருப்பது வெறும் 5 லட்சம் அரசு பணியிடங்கள் தான் என்றார் அன்புமணி.