32 ஆண்டுகளுக்கு பிறகு வேடசந்தூர் தொகுதியை தொடர் வெற்றிகளால் தக்க வைத்து அதிமுக சாதனை
திண்டுக்கல்: 32 ஆண்டுகளுக்கு பின் அதிமுக வேடசந்தூர் தொகுதியை தொடர்ச்சியான வெற்றிகளால் தக்க வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறும் கூட்டணி தான் ஆட்சிக்கு வரும் என்பது கடந்த 13 சட்டசபை தேர்தல் மூலம் நிரூபணமாகியுள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு 1952ம் ஆண்டில் முதல்முதலாக நடந்த சட்டசபை தேர்தலில் வேடசந்தூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மதனகோபால் வெற்றி பெற்றார். அம்முறை மட்டும் வேடசந்தூரில் வெற்றி பெற்ற கட்சியின் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை.
அதன் பிறகு 1957ம் ஆண்டு முதல் வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியின் கூட்டணி தான் ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது வேடசந்தூரில் அதிமுக வேட்பாளர் வி.பி.பி. பரமசிவம் 19 ஆயிரத்து 938 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இதன் மூலம் வேடசந்தூர் சென்டிமென்ட் தொடர்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது 1977, 1980, 1984 என தொடர்ந்து மூன்று முறை அதிமுக வேடசந்தூர் தொகுதியை கைப்பற்றியது.
அதன் பிறகு அதிமுக இந்த தொகுதியில் வென்றுள்ளது. ஆனால் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வென்று தொகுதியைத் தக்க வைத்தது இல்லை.
1989-ல் திமுக; 1991-ல் அதிமுக; 1996-ல் திமுக; 2001-ல் அதிமுக; 2006-ல் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் என மாறி மாறிதான் வென்று வந்துள்ளன.
2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் பழனிச்சாமி இத்தொகுதியில் வென்றார். தற்போதைய தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் டாக்டர் பரமசிவம் வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த 32 ஆண்டுகளில் அடுத்தடுத்து 2 முறை தொடர்ச்சியாக வென்று வேடசந்தூர் தொகுதியை அதிமுக வைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
தற்போது வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள வி.பி.பி. பரமசிவம் 1980, 1984ம் ஆண்டு தேர்தலில் வேடசந்தூரில் வெற்றி பெற்ற வி.பி. பாலசுப்பிரமணியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.