பெண்ணின் முகத்தில் மயக்க ஸ்பிரே தெளித்து 7 பவுன் அபேஸ்.. ஏசி மெக்கானிக் கைது
பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கண்டறிந்து அவர்களின் முகத்தில் மயக்க மருந்தை தெளிந்து கொள்ளையடித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆர்.ஏ. புரம் பகுதியை சேர்ந்தவர் லலிதா. 61 வயதான இவர், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பிற்பகல் நேரத்தில் லலிதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்கவே, லலிதா கதவை திறந்தார். அப்போது வந்தது யார் என்று பார்ப்பதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் லலிதாவின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடிக்கப்பட்டது. இதில் திடீரென மயங்கி விழுந்தார்.
லலிதா. 2 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து லலிதா எழுந்து பார்த்தபோது, தான் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனது தெரியவந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நகைகளின் மதிப்பு 7 சவரன் என கூறப்படுகிறது. இதுகுறித்து தி.நகர் போலீசில் லலிதா புகார் அளித்தார். இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில் லலிதா வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருக்கும் ஒருவரே இந்த திருட்டுத்தனத்தை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அவரது பெயர் ரகுநாதன் என்பதும், ஏசி மெக்கானிக்கான அவர், தொழில் விஷயமாக செல்லும் பல வீடுகளில் தனியாக உள்ள பெண்களிடம் இதுபோன்று மயக்க மருந்து தெளித்து நகைகளை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரகுநாதனை தற்போது கைது செய்துள்ளனர்.