நாய் சார், மாடு சார்.. ஓரமா போங்க, நாங்க வண்டி ஓட்டனும்ல- திருச்சியில் நெளியும் வாகன ஓட்டிகள்!
திருச்சி: திருச்சி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக பெருகி வரும் கால்நடைகளின் நடமாட்டம், நாய்கள் பெருக்கம் மற்றும் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று அண்மையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம் நடத்தினார்கள்.
இந்த விவாதத்தின் பலனாக திருச்சி மாநகரில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளை பிடிப்பதுடன் அவற்றிற்கு அபராத நடவடிக்கையும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய அபராத நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் மாடுகளின் முகாம்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
பயத்தின் பீதியிலேயே வாகனத்தை ஓட்டிச் செல்லும் நிலையும் மாறவில்லை. இந்த பணிகள் முழுமையாக எடுக்கப்படுமா என்ற கேள்விக்குறியுடன் பொதுமக்கள் பார்வையும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை பகுதியில் தொடர்ந்து மாடுகள் சாலைகளில் ஆக்கிரமித்து வருவதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியை குறிவைத்த மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் மூலமாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு மாடுகளை அப்புறப்படுத்தினர்.
ஆனபோதிலும், அந்த பகுதியில் நாய்களின் தொல்லையும், பன்றிகளின் அட்டகாசமும் இருந்து வருவது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.