கோவையில் குண்டுகள் வெடிக்கும்… மிரட்டும் மாவோயிஸ்டுகள்… உஷாரான போலீஸ்
கோவை: ஆகஸ்ட் 15ம் தேதி 10 இடங்களில் குண்டு வெடிக்கும் என கோவை ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஒரு மர்ம கடிதத்தில், எழுதப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுகள் பெயரில் வந்துள்ள இந்த கடிதம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் கடந்த மே மாதம் மாவேயிஸ்ட்கள் தென்மாநில ஆலோசனை கூட்டம் நடத்திய போது, இயக்கத்தை சேர்ந்த கண்ணன்(46), ரூபேஷ்(45), இவரது மனைவி ஷைனா(42), அனூப்(31), வீரமணி(60) ஆகியோரை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களில் ரூபேஷ், ஷைனா ஆகியோர் கேரளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோல, வீரமணி மீதும் கேரளாவில் வழக்கு இருப்பதால் கேரள போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அனூப், கண்ணன் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, திருப்பூரில் மாவோயிஸ்ட் தம்பதி பதுங்கியிருந்த வீட்டிலிருந்து மொபைல்போன்கள், சிம் கார்டு, ஹார்டு டிஸ்க் உள்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்அடிப்படையில், கேரளா, ஆந்திராவில் மாவோயிஸ்ட்கள், ஆதரவாளர்கள் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூர் அருகே மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பீளமேட்டிலுள்ள கியூ பிரிவு அலுவலகத்துக்கு முன் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக கோஷமிட்டு தப்பிய வெள்ளலுாரை சேர்ந்த மாசாணிமுத்து, மற்றும் முத்துமாணிக்கம் பிடிப்பட்டனர். கேரள மாநில மாவோயிஸ்ட் ஆதரவாளர்களுடன் இவர்களுக்கு பழக்கம் உள்ளதாக தெரிகிறது.
மாவோயிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்களிடம் பயிற்சி பெற்ற ஆதரவாளர்கள் பல இடங்களில் ஊடுருவி உள்ளதாக விசாரணையில் இருவரும் கூறியுள்ளனர். இதையடுத்து மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் விபரங்களை கியூ போலீசார் சேகரித்து வருகின்றனர். பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் 10 இடங்களில் ஆகஸ்ட் 15ம் தேதி குண்டு வெடிக்கும் என, கோவை ராமநாதபுரம் போலீசுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மாவோயிஸ்ட் பெயரில் வந்துள்ள அந்த கடிதம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மிரட்டல் கடிதம் வந்த தகவல் பரவியதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அத்வானி வருகையை முன்னிட்டு தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதுமுதல் கோவை மாநகருக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது வாடிக்கையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications