ஏதாவது பிரச்சினைன்னா உடனே ஒரு போன் பண்ணுங்க... ஓபிஎஸ்சிடம் சொன்ன மோடி
தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் ஒரே ஒரு போன் பண்ணுங்க... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: உடல்நலக்குறைவால் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த திங்கட்கிழமை இரவு மரணமடைந்ததாக அப்பல்லோ அறிவித்தது. ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி அறிந்து தமிழக மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர்.
ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிற மாநில முதல்வர்கள் என நாடு முழுவதும் இருந்தும் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கண்ணீர் விட்ட ஓபிஎஸ்
ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது, அவரது உடல் அருகே நின்று கொண்டிருந்த ஓபிஎஸ் இறுக்கமான நிலையில் நின்று கொண்டிருந்தார்.
ஆறுதல் சொன்ன மோடி
மோடியைப் பார்த்த உடன் குனிந்து அழுதார் முதல்வர் ஓபிஎஸ், அப்போது ஆறுதல் கூறும் வகையில் அவரை கட்டி அணைத்தார் மோடி. அதன்பிறகு சசிகலா தலையில் கைவைத்து தடவி கொடுத்து ஆறுதல் கூறினார். அப்போது, அழுது கொண்டிருந்த ஒபிஎஸ்சை பிரதமர் மோடி தனது அருகே அழைத்தார்.
கட்டி அணைத்த மோடி
அப்போதும் கண் கலங்கினார் ஓபிஎஸ் , மீண்டும் ஆறுதல் கூறும் வகையில் மோடி கட்டி தழுவினார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்ற மோடி கார் ஏறுவதற்கு முன்பு வெளியே நின்று கொண்டிருந்த போது மீண்டும் ஓபிஎஸ்சிற்கு ஆறுதல் கூறும் வகையில் அவரை கட்டி அணைத்தார்.
ஒரு போன் பண்ணுங்க
தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் ஒரு போன் பண்ணுங்க நான் இருக்கேன். எந்த பிரச்சினை பற்றியும் கவலைப் படாதீங்க உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம் என்று ஓபிஎஸ்சிடம் பிரதமர் மோடி கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.