வீடு தோறும் சின்ன நூலகம்.. செல்போனிலும் நூலகம்.. கலாம் யோசனை!
புதுவை : வீடுகள் தோறும் சிறிய நூலகங்கள் அமைக்கப் பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். மேலும், தற்போதைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், கைப்பேசிகளை நூலகங்களுடன் ஒருங்கிணைக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி டெல்நெட் மற்றும் புதுச்சேரி பிரெஞ்ச் ஆய்வு நிறுவனம் சார்பில் புதுவையில் 17வது தேசிய நூலக மாநாடு நேற்று தொடங்கியது. ‘அறிவு வளர்ச்சி, நூலகவியல் மற்றும் தகவல் கட்டமைப்பு' எனும் தலைப்பிலான இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம். அப்போது அவர் கூறியதாவது :-
நூல்களே நண்பன்...
புதுச்சேரி ஆன்மிகத்துக்கும், கல்விக்கும் பெயர் பெற்ற இடமாக உள்ளது. நூல்கள்தான் ஒருவரது வாழ்வில் சிறந்த வழிகாட்டியாகவும், நண்பனாகவும் விளங்குகின்றன. கடந்த 1950ஆம் ஆண்டுகளில் நான் பயிலும் போது, மூர்மார்க்கெட் பகுதிதான் எனக்கு மிகவும் பிடித்த இடமாக விளங்கியது. ஏனென்றால் அங்கு அதிகளவில் புத்தகங்களை வாங்க முடியும். அதில் வாங்கிப் படித்த புத்தகங்கள் எனது வாழ்வில் உந்து சக்தியாக விளங்கின.
கைப்பேசிகளுடன் நூலகங்கள் இணைப்பு...
தற்போது நவீன தகவல் தொழில்நுட்பம் பெருகி விட்டது. அனைவரும் தங்கள் கைப்பேசிகள் மூலமே தேவையான தகவல்களை அறிந்து கொள்கின்றனர். இந்தியாவில் தற்போது 80 கோடி பேர் கைப்பேசிகளை பயன்படுத்துகின்றனர். எனவே கைப்பேசிகளுடன், நூலகங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் நூல்களை படிக்கும் தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நூல்களையும் மொழிமாற்ற வசதியுடன் படிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை கைப்பேசிகளில் ஏற்படுத்த வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள்...
மேலும் மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் நூல்களை குரல் வசதியுடன் பயிலும் தொழில்நுட்பத்தையும் ஏற்படுத்த வேண்டும். இதனால் அதிநவீன யுகத்திலும் நூல்களை வாசிக்கும் பழக்கம் குறையாமல் இருக்கும். அறிவுச்சுரங்கங்களாகத் திகழும் புத்தகங்களை அனைவரும் வாசிக்க ஏதுவாகும். தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ப அனைத்து நூலகங்களையும் கணினி மயமாக்கி, டிஜிட்டல் மயமாக்குவது அவசியம்.
வீடுகள் தோறும் நூலகம்...
மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் பழக்கத்தை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது வீடுகளில் 20 முதல் 30 நூல்களைக் கொண்ட சிறிய நூலகங்களை ஏற்படுத்த வேண்டும். அதில் குறைந்தது 10 குழந்தைகள் நூல்களாவது இருக்க வேண்டும்.
விவாதிக்க வேண்டும்...
நாள்தோறும் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மணி நேரம் நூல்களை வாசித்து அதன் பொருள் குறித்து விவாதிக்க வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் அனைவரது அறிவும் பெருகும்.
வாசிக்கும் பழக்கம்...
இணக்கமான சூழ்நிலையும் ஏற்படும். பெற்றோர் நூல்களை வாசித்தால் தானாகவே குழந்தைகளும் சிறிய வயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வர்.
குடும்ப சொத்து...
வீட்டில் அமைக்கப்படும் ஒரு நூலகம் தான் அக்குடும்பத்தின் சிறந்த சொத்தாகும். இதன் மூலம் அவர்கள் வருங்காலத்தில் சிறந்த தலைவராகவோ, விஞ்ஞானியாகவோ, கல்வியாளராகவோ, பொறியாளராகவோ, விளங்குவர்.
திருக்குறளின் மகிமை...
திருக்குறளுக்கு ஈடு இல்லை: 2,200 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறளுக்கு ஈடு இணை ஏதுமில்லை. அதை இயற்றிய வள்ளுவர் உலகின் அனைத்து வகையான விஷயங்கள் குறித்தும் இரு வரிகளில் தெளிவாக விளக்கி உள்ளார். ஒரு எழுத்தாளருக்கான வழிகாட்டியாக திருக்குறள் உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.