தினகரனை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா நியமித்தது சட்டவிரோதம்: எடப்பாடி கோஷ்டி அதிரடி தீர்மானம்!
சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டது சட்ட விரோதம் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சசிகலாவால் தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என இன்றைய ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டே ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. சில மாதங்களில் சசிகலாவை மட்டும் தனக்கு உதவியாளராக இருக்க அனுமதித்தார். இதனையடுத்து போயஸ்கார்டனுக்குள் மீண்டும் வந்தார் சசிகலா.
5 ஆண்டுகள் கட்சியை விட்டு ஒதுங்கியிருந்த சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் மீண்டும் போயஸ்கார்டனுக்குள் நுழைந்தனர். சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்க அதிமுக நிர்வாகிகளை நிர்பந்தப்படுத்தியது மன்னார்குடி குடும்பம். இதனையடுத்து அவசரம் அவசரமாக சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தனர்.
சசிகலாவின் அதிகாரம்
கட்சி அதிகாரம் கையில் வந்த உடன் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டார் சசிகலா முடிவு, கட்சி இரண்டாக பிளவு பட்டது. ஆனாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. சிறை செல்லும் முன்பாக டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்தார் சசிகலா.
தினகரன் கட்டுப்பாட்டில் கட்சி
இதனையடுத்து கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் டிடிவி தினகரன். அது எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் இருந்த கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.
சிறை சென்ற தினகரன்
இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் திகார் சிறைக்கு சென்றார் டிடிவி தினகரன். கட்சி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து அதிமுகவில் டிடிவி தினகரன் அணி ஒன்று உருவானது.
தினகரன் அதிரடி
சிறையில் இருந்து ஜாமீனில் வந்த தினகரன் அணிகள் இணைய 60 நாட்கள் கெடு விதித்தார். 60 நாட்கள் அமைதியாக இருந்த தினகரன் கடந்த 4ஆம் தேதி முதல் கட்சி விவகாரங்களில் தலையிட்டு வருகிறார். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். நேற்றும் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
எடப்பாடியார் ஆலோசனை
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அணிகள் இணைப்பது பற்றியும் பேசப்பட்டது. அப்போது சலசலப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்டவிரோதம்
இந்த கூட்டத்தில் சசிகலாவினால் டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது சட்ட விரோதம் என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் நியமனம் செல்லாது எனவும், அதிமுக பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்திருக்கிறார் எனவே அதுவும் செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி தனது அதிரடியை துவங்கியுள்ளது. இது டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்கும். தினகரனுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் இந்த தீர்மானத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்களோ என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.