அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் வி. செந்தில் பாலாஜி... பயோடேட்டா
சென்னை: கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி இரண்டு முறை தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்று கரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். மூன்றாவது முறையாக தொகுதி மாறி அரவக்குறிச்சியில் போட்டியிடுகிறார். அவரது வாழ்க்கைக்குறிப்பை அறிந்து கொள்ளலாம்.
செந்தில் பாலாஜி,41. சொந்த ஊர் மண்மங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமேஸ்வரப்பட்டி. பி.காம். பட்டதாரி. மாணவப்பருவத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்டிருந்த செந்தில் பாலாஜி, முதலில் அரசியலில் அடி எடுத்து வைத்தது மதிமுகவில்தான். பின்னர் திமுகவிற்கு சென்று அங்கிருந்து அதிமுகவிற்கு தாவினார்.
1996, 2001 ஆம் ஆண்டுகளில் இருமுறை கரூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். முன்னதாக, கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர், மாவட்ட மாணவர் அணி செயலாளர், ஜெ பேரவை செயலாளர், மாணவர் அணி இணைச் செயலாளர், கிளைகழகத் தலைவர் ஆகிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றபோது கோயில்களில் வழிபாடு நடத்தி மொட்டை போட்டு கட்சியின் விசுவாசியாக இருந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு இவரது அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் திடீரென்று பறிக்கப்பட்டது அதன் பிறகு கரூரில் நடந்த பல்வேறு கூட்டங்களில் சரிவர கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் இவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் கடந்த சட்டசபை தேர்தலின் போது அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டார். பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் ரத்தானது. இதனையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பாளர் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா தற்போது மருத்துவமனையில் உள்ள நிலையில் புதிய வேட்பாளர்களை அறிவிப்பதில் சிக்கல் உள்ளதாக நினைத்த சசிகலா, தனது ஆதரவாளரான செந்தில் பாலாஜி போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார்.