அண்ணா 45வது நினைவு தினம்: ஜெயலலிதா, கருணாநிதி, வீரமணி மலரஞ்சலி!
சென்னை: அறிஞர் அண்ணாவின் 45வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, வீரமணி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா
முன்னாள் முதல்வரும் திமுக நிறுவனருமான அறிஞர் அண்ணாவின் 45வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை, மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் மலரஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி
இதேபோல், தி.மு.க.வினர் இன்று காலை திருவல்லிக்கேனி, வாலாஜா சாலையில் இருந்து அண்ணா நினைவிடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர், அண்ணா நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்பட பல்வேறு தி.மு.க.வினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தி.க. தலைவர் கி.வீரமணி
இதேபோல், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இன்று காலை சுமார் 8 மணியளவில் அண்ணா நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன், தி.க. துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைத் தலைவர் சேதுராமன் உள்பட பல்வேறு தி.க.வினரும் அண்ணா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.