உயிரை பணயம் வைத்து சென்னை மக்களை மீட்கும் ராணுவ வீரர்கள்!
சென்னை: விமானம், படகு என அனைத்து வகைகளிலும், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பத்திரமான இடங்களுக்கு சென்று சேர்த்துவருகிறது.
சென்னையில் பெய்த கன மழையால் வெள்ளம் வீடுகளை மூழ்கடிக்க தொடங்கியதும், மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறிய மாநில அரசும், அதன் நிர்வாகங்களும், ராணுவத்தை உதவிக்கு அழைத்தன.
உடனடியாக, கடற்படை, தரைப்படை, விமானப்படை, என முப்படைகளும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு விரைந்து வந்தன.
வெள்ளம், மழை என்றும் பாராமல் ராணுவத்தினர், இரவு-பகலாக மக்களை மீட்கும் நடவடிக்கையில் தங்கள் உயிரையும் பணையம் வைத்து இறங்கினர்.
செயின்ட் தாமஸ் மவுண்ட்டிலுள்ள ராணுவ மருத்துவமனையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக, ராணுவத்தினர், மருந்து, மாத்திரைகள் கொடுத்தனர்.
நடக்க முடியாத முதியவர்களை ராணுவ வீரர்கள், தங்கள் கரங்களில் ஏந்திச் சென்று படகுகளில் அமரச் செய்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
பலர் ராணுவ விமானங்களின் மூலம், ஹைதராபாத் விமான நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இன்று காலை சென்ற விமானத்தில், குழந்தைகள் உட்பட 99 பேர் ஏற்றிச்செல்லப்பட்டு ஹைதராபாத்தில் விடப்பட்டனர்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்கு ராணுவத்தின், 044 - 25393514, 044 - 25363792 போன்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.