சோபியாவிற்கு மிரட்டல் விடுத்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை
மாணவி சோபியாவிற்கு மிரட்டல் விடுத்து அநாகரிகமாக பேசியது தொடர்பாக பா.ஜ.க.வினர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: மாணவி சோபியாவிற்கு மிரட்டல் விடுத்து அநாகரிகமாக பேசியது தொடர்பாக பா.ஜ.க.வினர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்ற விமானத்தில் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா கோஷமிட்டார். இதனால் அவருக்கும் தமிழசை சௌந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
இதுகுறித்து தமிழிசை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சோபியா கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம்.
ஸ்டாலின் அறிக்கை
இதுகுறித்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாசிச பா.ஜ.க அரசு ஒழிக என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மாணவி சோபியா மீது போலீசிடம் புகாரளித்துள்ளனர். அதன்பின் சோபியாவை அவசர அவசரமாக கைது செய்தது உள்ளனர். இதற்கு என் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு கூட உரிமையில்லையா
ஜனநாயக நாட்டில் ஓர் ஆட்சி ஒழிக என்று கூறுவதற்கு கூட உரிமையில்லை என்ற நிலை பா.ஜ.க மத்தியில் ஆட்சியிலிருப்பதாலும், மாநிலத்தில் பா.ஜ.க.வின் அடிமை ஆட்சி நீடிப்பதாலும் உருவாகியிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்க வைக்கிறது. தமிழகத்தில் இப்படியொரு அராஜகமான, அத்துமீறிய கைதை தமிழக காவல்துறை அரங்கேற்றி உள்ளது. காவி மயத்திற்கு சில காவல்துறை அதிகாரிகளும் அடி பணிந்து கிடக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் பிரச்சனை
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திரு ரவிக்குமாருக்கு மதவெறியர்களால் அச்சுறுத்தல் என்றால் காவல்துறை கண்டு கொள்வதில்லை. அதை பற்றி பெரிதாக கவலை கொள்வதில்லை. அருவருக்கத்தக்க கருத்துகளை தெரிவித்த திரு எஸ்.வி. சேகரை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும் கைது செய்யவில்லை. வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், மத துவேஷத்தைப் பரப்பும் கருத்துகளையும், தினமும் தெரிவிக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த எச் ராஜா மீது புகார் கொடுத்தால் வழக்குப் பதிவு செய்யவே நீதிமன்றத்தில் ஆணை பெற வேண்டியதிருக்கிறது.
மோசமான அதிகாரம்
ஆனால், சோபியா முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக விமான நிலையத்திலேயே புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். அங்கேயே மாணவி சோபியாவை கைது செய்தது காவல்துறையின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தைக் காட்டுகிறது. மாணவியை கைது செய்யத் தூண்டியது மட்டுமின்றி, அந்த மாணவியை தன் கட்சிக்காரர்களை வைத்தே மிரட்ட வைத்து அநாகரிகமாகப் பேசியதை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மிகவும் வேதனையளிக்கிறது.
பினாமி அ.தி.மு.க அரசு
தமிழகத்தில் தங்களின் பினாமி அ.தி.மு.க அரசு பதவியில் நீடிப்பதால் எந்த அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்று நினைக்கிறார்கள். எந்த அரங்கத்திலும் கலாட்டா செய்யலாம், வன்முறை கருத்துக்களை எங்கும் விதைக்கலாம் என்று நினைத்து செயல்படுகிறார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க.வினரும், அவர்களின் துணை அமைப்பில் உள்ளவர்களும் திட்டமிட்டு செயல்படுவது, தமிழகத்தில் நிலவும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல். இதை பா.ஜ.க. மாநில தலைவரோ, அக்கட்சியில் வெறுப்புப் பேச்சுக்களை பேசுவோரோ உணரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
விமர்சனம் செய்யும் உரிமை
ஜனநாயக நாட்டில் பா.ஜ.க. ஆட்சி மீது மட்டுமல்ல, எந்தக் கட்சியின் ஆட்சி மீதும் விமர்சனம் செய்யும் அடிப்படை உரிமை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அந்த சுதந்திரத்திற்கும் வேட்டு வைக்கும் வகையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் செயல்பட்டிருப்பது சகிப்புத்தன்மையே உன் விலை என்ன? என்று கேள்வி கேட்பது போல் அமைந்து விட்டது.
ஜாமீன்
இந்நிலையில் நீதித்துறை, சோபியாவிற்கு ஜாமீன் அளித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். அந்த மாணவி மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கை, தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்., மாணவி சோபியா தனது ஆராய்ச்சிப் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்றுள்ளார்.
பா.ஜ.க.வினர் கைது
மேலும் முக்கியமாக, மாணவி சோபியாவிற்கு மிரட்டல் விடுத்து அநாகரிகமாக பேசியது தொடர்பாக பா.ஜ.க.வினர் மீது அவரது தந்தை அளித்துள்ள புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனடியாக கைது செய்து, இது போன்று வெறுப்பு விதைகளை விதைக்கும் பா.ஜ.க.வினரின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.