அருப்புக்கோட்டையில் அதிகாலையில் பயங்கரம்.. தீக்கிரையான ஏடிஎம் மையம்.. ரூ.7 லட்சம் எரிந்து சாம்பல்
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, தனியார் ஏடிஎம் மையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை சிவன் சாலையில் இருந்த தனியார் ஏடிஎம் மையம் ஒன்றில் தான், இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை குறிப்பிட்ட தனியார் ஏடிஎம் மையத்தில் திடீரென லேசாக தீ பற்றியுள்ளது.
அந்த நேரத்தில் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் கதவை திறந்துள்ளார். இதனையடுத்து லேசாக இருந்த தீ காற்றின் வேகத்தில் ஏடிஎம் மையம் முழுவதும் சரசரவென பரவியது. இதனால் அந்த ஏடிஎம் மையமே பற்றி எரிந்தது.
முதல்ல திருப்புவனம் திருஞானத்துக்கு நாம நன்றி சொல்லியே ஆகணும்..!
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளரும், அக்கம்பக்கத்தினரும் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் வேகமாக பற்றி எரிந்த தீயில் சிக்கி ஏடிஎம் இயந்திரம் முற்றிலும் நாசமானது.
தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், ஏடிஎம் மெஷின் முழுவதுமாக நாசமானதால் அதிலிருந்த லட்சக்கணக்கான பணமும் சாம்பலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏடிஎம் மெஷினில் சுமார் ரூ7 லட்சம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலானதால் குறிப்பிட்ட தனியார் வங்கிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில் இறங்கிய போலீஸார், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் கூறியுள்ளனர்.