”ஆஸ்திரேலியாவிற்கு வர போலி ஏஜெண்டுகள் துணை வேண்டாம்” - துணைத்தூதர் சீன் கெல்லி அறிவுரை
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு வர விரும்புபவர்கள் போலி ஏஜெண்டுகளிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என்று அந்நாட்டு துணைத் தூதர் சீன் கெல்லி சென்னையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "ஆஸ்திரேலியா நாட்டுக்கு அகதிகள் வருகிறார்கள். அவர்கள் முறைப்படி சட்டபூர்வமாக வரவேண்டும். அவ்வாறு வந்தால் அவர்களை வரவேற்போம். ஆனால் இலங்கை அகதிகள் பலர் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சி செய்கிறார்கள்.
படகு மூலம் சட்டவிரோதமாக நியூசிலாந்து செல்ல முயன்றதாக சமீபத்தில் திருச்சியில் இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நியூசிலாந்து செல்ல முயற்சிக்கவில்லை. நியூசிலாந்து சென்னையில் இருந்து 6 ஆயிரம் நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது. ஆனால் சென்னையில் இருந்து ஆஸ்திரேலியா 3 ஆயிரம் நாட்டிக்கல் மைல் தொலைவில்தான் உள்ளது. எனவே அவர்கள் ஆஸ்திரேலியா செல்லத்தான் முயற்சி செய்துள்ளனர். யாரும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வராதீர்கள்.
ஆஸ்திரேலியா செல்ல நினைக்கும் சிலர் போலி ஏஜெண்டுகளை அணுகுகிறார்கள். அவர்களை படகில் அழைத்துச் செல்ல ஏஜெண்டுகள் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கும் செல்ல முடியாமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் நடுக்கடலில் உணவின்றி தத்தளிப்பார்கள்.
2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்றவர்கள் 1,200 பேர் கடலில் உள்ள ஒரு தீவில் இறந்துள்ளனர். அதாவது அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கும் திரும்ப முடியாமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் உணவின்றி, படகில் டீசல் இன்றி இறந்தவர்கள் ஆவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.