தயா மஹாலில் ஒரு கூட்டம்.. திடீரென என்ட்ரி ஆன அழகிரி.. கைவிட மாட்டேன் என்று 'மெசேஜ்'!
மதுரை: மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கூட அழகிரிக்குச் சொந்தமான கல்யாண மஹாலில் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்திற்கு சொல்லாமல் கொள்ளாமல் வந்தார் அழகிரி. என்னை நம்பியவர்களை நான் கைவிட மாட்டேன், கவலைப்படாதீங்க என்று கூறி அவர்களுக்கு ஆறுதல் சொல்லிச் சென்றார்.
மதுரையில், சமீபத்தில் பி.எம். மன்னன், முபாரக் மந்திரி, எழில்மாறன், அன்பரசு, பாலாஜி ஆகிய மு.க.அழகிரி ஆதரவு திமுக நிர்வாகிகள் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், அழகிரிக்குச் சொந்தமான மதுரை தயா மஹாலில் அவரது ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம் பேசுகையில், நாம் எந்த சூழ்நிலையிலும் அழகிரிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். இடையில் சிறு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளத்தை மேடாக்கி, நம்மை அழகிரி காப்பாற்றுவார் என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ., கவுஸ்பாட்ஷா பேசுகையில், இது நமக்கு சோதனை காலம். ஆனால், கவலைப்பட வேண்டாம். அழகிரி பிறந்த நாளுக்கு அனைத்து வார்டுகளில் இருந்தும் தொண்டர் மற்றும் நிர்வாகிகள் பேனர் ஏந்தி ஊர்வலம் நடத்த வேண்டும். நிர்வாகிகள் தேர்தலுக்கு முறைப்படி விண்ணப்பித்து, தேர்தலை சந்திப்போம் என்றார்.
இந்த சமயத்தில் திடீரென அழகிரி அங்கு வந்தார். ஆதரவு நிர்வாகிகளை அழைத்து ஆறுதல் கூறினார். கட்சி அறிவிப்பால் யாரும் கவலைப்பட வேண்டாம். என்னை நம்பியவர்களை கைவிட மாட்டேன். கட்சித் தலைமை அறிவித்துள்ள நிர்வாகிகள் தேர்தலை முறைப்படி எதிர்கொள்ள தயாராகுங்கள்; தேர்தலை முறைப்படி எதிர்கொள்வோம். கலைஞர் கவனத்திற்கு கொண்டு சென்று, இதற்கு தீர்வு காண்போம் என்றார்.
அழகிரியின் ஆறுதல், துவண்டு போயுள்ள அவரது ஆதரவாளர்களை சற்றே உற்சாகமடைய வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications