வங்கியிலிருந்து 20 கிலோ நகை கொள்ளை.. போலீஸைப் பார்த்ததும் போட்டு விட்டு தப்பிய திருடன்!
கீரனூர் அருகே உள்ளது குளத்தூர் கிராமம். இங்கு சிட்டி யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் மேலாளராக அனுராதா என்பவர் உள்ளார். நேற்று வழக்கம் போல பணிகளை முடித்து விட்டு வங்கியை ஊழியர்கள் பூட்டி சென்றுள்ளனர். தினமும் இரவு நேரத்தில் இந்த வங்கியை போலீசார் கண்காணிப்பது வழக்கம்.
நேற்று போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், இளைஞர் பாதுகாப்பு படையை சேர்ந்த கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரமாக ஒரு வாலிபர் சாக்கு மூட்டையுடன் நின்றிருப்பதைப் பார்த்த ரோந்துப் படையினர் அவரிடம் சென்றனர். அதைப் பார்த்த அந்த நபர் தான் வைத்திருந்த மூட்டையை கீழே போட்டு விட்டு ஓடி விட்டார். அவரைப் போலீஸார் பிடிக்க முயன்றனர். ஆனால் இருளில் அந்த நபர் ஓடி விட்டார்.
இதையடுத்து அந்த மூட்டையைக் கைப்பற்றிய போலீஸார் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், புதுக்கோட்டை எஸ்.பி. உமா, டி.எஸ்.பி. ஆறுமுகம், கீரனூர் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, மாத்தூர் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் வேலு சாமி உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது அதில் நகைகள் இருந்தன. அவை மொத்தம் 20 கிலோவுக்கும் கூடுதல் என்று தெரிகிறது. அதேபோல ஒரு அட்டைப் பெட்டியும் இருந்தது. அதிலும் நகைகள் இருந்தன. மொத்தமாக இவற்றின் மதிப்பு ரூ. 5 கோடி இருக்கலாம். இந்த நகைகளை, சிட்டி யூனியன் வங்கியிலிருந்து அந்த நபர் திருடியுள்ளார். ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்து திருடியுள்ளார்.
வங்கி மேலாளர் அனுராதா வரவழைக்கப்பட்டு அவர் மூலம் வங்கியில் இருந்த நகைகள் எத்தனை என்பது குறித்து ஆராயப்பட்டது. அதில் அனைத்து நகைகளையும் அந்த மூட்டையில் போட்டு சுருட்டியுள்ளான் திருடன் என்பது தெரிய வந்தது.
ஒரு வங்கியின் அத்தனை நகைகளையும் சாக்குப் பையில் போட்டு திருடி வந்த திருடனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூட்டை பெரிதாக இருந்ததால்தான் அவனால் தூக்கிக் கொண்டு போக முடியாமல் போட்டு விட்டு தப்பியுள்ளான்.