போராட்டத்தின் போது என்னை கைது செய்தனர்; அதை ரஜினி கேட்கவில்லையே- பாரதிராஜா பொளேர்
போராட்டத்தின்போது என்னை கைது செய்தனர், அதை ரஜினி கேட்கவில்லையே என்று பாரதிராஜா தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தின்போது என்னை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காத ரஜினி போலீஸார் மீதான தாக்குதலை மட்டும் கண்டிப்பது ஏன் என்று பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகமே போர்க்களமாகியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. எனினும் அதை மீறி நேற்று ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதை கண்டித்து அண்ணா சாலையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பேரிகாடை தாண்டி உள்ளே வர நினைத்த போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் வெற்றிமாறன், களஞ்சியம் உள்ளிட்டோருக்கும் தடியடி நடந்தது.
|
டுவிட்டரில் ரஜினி கண்டனம்
இந்நிலையில் போலீஸார் மீது நாம் தமிழர் கட்சி கொடியுடன் கூடிய சிலர் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானது. இது வன்முறையின் உச்சம் என்று ரஜினிகாந்த் வீடியோவை இணைத்து டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு காலை முதல் ரஜினிக்கு எதிராகவே வினைகள் வருகின்றன.
கேள்விக் கணைகள்
போலீஸார் மீது தாக்குதல் நடத்தியபோது பேசிய ரஜினி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இளைஞர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல், திருப்பூரில் பெண் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றை கண்டிக்காதது ஏன் என்று கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.
வன்முறையல்ல
இந்த நிலையில் சென்னையில் பாரதிராஜா, சீமான், மணியரசன், தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ், கவுதமன், அமீர் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாரதிராஜா பேசுகையில் போலீஸார் மீது நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் வன்முறை அல்ல, எதிர்வினை.
பூதாகரமாக உள்ளது
எதிர்வினையை மட்டுமே பூதாகரமாக பேசுவது சரியில்லை. போராட்டத்தில் என்னை கைது செய்தனர், அதை பற்றி ரஜினி கேட்கவில்லை. ஆனால் போலீஸார் மீதான தாக்குதலை மட்டும் கண்டிக்கிறார்.
ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார்
அடுத்து 20-ஆம் தேதி நடைபெறும் ஐபில் போட்டிகளின் போது போராட்டம் நடத்துவோம் அது வேறு மாதிரியாக இருக்கும். ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார். அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர்.
விமான நிலையம் முற்றுகை
தமிழர்கள் தாக்கப்பட்டபோது குரல் கொடுத்தாரா ரஜினி? இயக்குநர் வெற்றிமாறனை எதற்காக போலீஸ் தாக்கியது. நாளை தமிழகத்துக்கு வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவோம். விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என்றார் பாரதிராஜா.