தமிழகத்தில் எலைட் மதுக்கடைகளா? போராடுவோம் போராடுவோம்...தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மதுவிலக்கு வேண்டும் என்று ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு இருக்கும் நிலையில் ‘எலைட்' மதுபான கடைகளை திறக்கப்போவதாக அரசு அறிவித்திருப்பது கண்டத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது. காமராஜர் பிறந்த நாள் விழாவை பாஜக கொண்டாட தகுதி இருக்கிறதா? என்று காங்கிரசார் சொல்கிறார்கள். நாட்டுக்காக தன்னலமற்று உழைத்த தலைவர்களை போற்றும் கட்சி பாரதிய ஜனதா, எனவே, காமராஜர் விழாவை கொண்டாட பாஜகவிற்கு தகுதி உள்ளது என்றார்.

ராகுல் பேச்சு
திருச்சியில் ராகுல்காந்தி நேற்று பேசும் போது, இப்போதுதான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது போல் பேசி இருக்கிறார். பல ஆண்டுகள் பதவியில் இருந்த அவர்கள் எத்தனை முறை காமராஜர் விழாவுக்கு வந்தார்கள்? ராகுலின் வரவு தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

மதுக்கொள்கை
புதிய மதுக்கொள்கையை கொண்டு வரப்போவதாக பேசி இருக்கிறார். அப்படியானால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எப்படிப்பட்ட மதுக்கொள்கையை வைத்திருக்கிறார்கள். ராகுல் கையில் அதிகாரம் இருந்த போது இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதை கண்டித்து அவர் நாடாளுமன்றத்தில் ஏன் பேசவில்லை.

போராட்டம் தொடரும்
பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்த மாதம் மதுவிலக்கை கொண்டு வருவதற்கான அறிகுறி தென்படாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை அறிவிப்போம்.

எலைட் மதுக்கடைகள்
மதுவிலக்கு வேண்டும் என்று ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு இருக்கும் நிலையில் ‘எலைட்' மதுபான கடைகளை திறக்கப்போவதாக அரசு அறிவித்திருப்பது கண்டத்துக்குரியது. ஒரு கடை கூட திறக்க விடாமல் தடுப்போம்.

சினிமாவில் டாஸ்மாக் காட்சி
சினிமாக்களில் மது குடிக்கும் காட்சிகளையும், புகை பிடிக்கும் காட்சிகளையும் தடுக்க வேண்டும். மது குடிக்கும் காட்சிகள் உள்ள திரைப்படங்களுக்கு வரிச்சலுகை தரக்கூடாது.

தண்ணீர் பஞ்சம்
ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற பிறகும் ஆட்சியில் வேகமும் இல்லை. மாற்றமும் இல்லை. தண்ணீர் பற்றாக்குறை பயமுறுத்தி வருகிறது. இதையெல்லாம் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் 50 சதவீதம் ஏரிகள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழக ஏரிகள் தூர்வாரப்படவில்லை எனவும் கூறினார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது.

2016 சட்டசபை தேர்தல்
2016 சட்டசபை தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க ஆயத்தமாகி வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியாக போட்டியிடுவோம். இந்த கூட்டணியிலும் மேலும் சில கட்சிகள் வரலாம். தனித்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு தயாராக உள்ளோம். விரைவில் மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகம் வர இருக்கிறார்கள்.

அமித்ஷா வருகை
தமிழ்நாட்டில் பாஜகவில் 45 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அவர்களை நேரடியாக சந்திக்கும் மகா மக்கள் சந்திப்பு இயக்கம் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கான கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் அடுத்த மாதம் 6ம் தேதி மதுரையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications