தேமுதிக தலைமை அலுவலகத்தில் பாஜக குழு- கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது!
சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா குழுவினர் இன்று முதல் கட்ட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தினர்.
16வது லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க, கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அக்கட்சி தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
அதன் பலனாக, ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தன. ஆனால், தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டதால், பா.ஜ.க. கூட்டணியில் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில் தற்போது தற்போது பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக, தே.மு.தி.க. தலைமைக்கழகம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
தே.மு.தி.க. வருகின்ற 24-4-2014 அன்று நடைபெற உள்ள 16-வது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 14 தொகுதிகளை ஒதுக்க முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று மாலை தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் இன்று நேரில் சென்றனர். அங்கு தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள் அவர்களை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையே அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
யார்- யார் பங்கேற்பு?
இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக சார்பில் அக்கட்சி இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ், கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ., துணை செயலாளர்கள் பி. முருகேசன், ஆர். உமாநாத், என். ஜாகீர் உசேன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட செயலாளர் வி. யுவராஜ், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். பாண்டியன், நாகப்பட்டிணம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். அருட்செல்வன், எம்.எல்.ஏ., ஆகியோரும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என். லட்சுமணன், மாநில அமைப்பு பொது செயலாளர் எஸ். மோகன்ராஜுலு, தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், மாநில பொது செயலாளர்களான எஸ்.ஆர். சரவண பெருமாள், வானதி சீனிவாசன், எம். கருப்பு முருகானந்தம், மாநில துணை தலைவர் எம். சக்ரவர்த்தி, மாநில செயலாளர்களான ஆர்.எஸ். ஆதவன், கே.டி. ராகவன், சிறுபான்மை அணி மாநில பொறுப்பாளர் ஆசிம், எஸ்சி அணி மாநில தலைவர் முருகன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், தென்சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ், வடசென்னை மாவட்ட தலைவர் பிரகாஷ், மாநில புரோட்டகால் பிரிவு தலைவர் ராத்மா சங்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.