சென்னையில் ரகசிய இடத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பாஜக, தேமுதிக
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தேமுதிகவுடன் நேற்று ரகசிய இடத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இணைவது உறுதியாகிவிட்டது. மேலும் புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்குநாடு தேசிய கட்சி ஆகியவையும் பாஜக கூட்டணிக்கு வருகின்றன.
மதிமுகவுக்கு 5 முதல் 7 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவுக்கு 10 தொகுதிகள் தர பாஜக தயாராக இருந்தது. ஆனால் பாமக 14 தொகுதிகள் கேட்பதால் பாஜக குழப்பத்தில் உள்ளது.
இந்நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி குறித்த நேரடி பேச்சுவார்த்தை நேற்று சென்னையில் ரகசிய இடத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் மோகன் ராஜுலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் தலைமையிலான நாடாளுமன்ற குழு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது. தேமுதிக 14 தொகுதிகள் கேட்கிறது. ஆனால் பாஜக 12 தொகுதிகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
முதல்கட்ட பேச்சுவார்த்தை தான் நேற்று நடந்துள்ளது. அடுத்த கட்டபேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடும் இழுபறிக்கு பிறகு தேமுதிக பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதால் அக்கட்சி நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு வந்துவிடும் என்று பாஜக நம்புகிறது.
அதே சமயம் 14 தொகுதிகள் தான் வேண்டும் என்று கூறும் பாமகவை கூட்டணியில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று பாஜக யோசித்து வருகின்றது. பாமக இறங்கி வராவிட்டால் பாஜக கூட்டணியில் இருப்பது கடினமே.