தமிழிசைக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்ற மறந்த "தவசி".. ஜெயலலிதாவும்தான்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் மகன் திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை - டாக்டர் சவுந்தரராஜன் தம்பதியரின் மகன் டாக்டர் சுகநாதன். இவருக்கும் கோவையைச் சேர்ந்த செல்வராஜ் - கோகிலா தம்பதியின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் நேற்று காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் திருமணமும், அதனைத் தொடர்ந்து மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேகாலயா கவர்னர் சண்முகநாதன் மணமக்களை நேரில் வாழ்த்தினார்.
திருமண வாழ்த்து...
தமிழிசை இல்லத் திருமண விழாவில் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன், திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி, பாஜக தலைவர்கள் இல.கணேசன், எஸ்.மோகன்ராஜூலு மற்றும் விஜிபி நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருணாநிதி...
பின்னர் மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, சுதிஷ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்,பாஜக எச்.ராஜா, காங்கிரஸ் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஜெயலலிதா ஆப்செண்ட்...
ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா இந்த திருமண விழாவில் பங்கேற்கவில்லை. முதல்வர் சார்பில் மணமக்களுக்கு பூங்கொத்தும், பரிசு பொருளும் வழங்கப்பட்டது.
நம்பிக்கை...
முன்னதாக தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்திருந்தார் தமிழிசை. அப்போது திருமணத்திற்கு கண்டிப்பாக வருவதாக ஜெயலலிதா கூறியதாக தமிழிசை தெரிவித்திருந்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணங்கள் குறித்தும் கூறப்படவில்லை.
விஜயகாந்த்தும் வரவில்லை...
அதேபோல திருமணத்தில் விஜயகாந்தும் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில் அவரது மனைவி பிரேமலதாவும், மச்சான் சுதீஷும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணிப் பேச்சு...
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது போல், தமிழகத்தில் பெரும்பாலும் இத்தகைய திருமண நிகழ்ச்சிகளே கட்சிகளின் கூட்டணிக்கு அடித்தளம் போடும் இடங்களாக அமைந்து வருகின்றன.
அதிமுக - பாஜக...
ஏற்கனவே திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. இதனால் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தத் திருமணத்தில் ஜெயலலிதா கட்டாயம் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. அதன்மூலம் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா திருமணத்தில் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக...
இதேபோல், லோக்சபா தேர்தலில் அமைந்த பாஜக கூட்டணி தொடர்ந்து தமிழகத்தில் நீடிப்பதாக பாஜக கூறி வருகிறது. ஆனால், தேமுதிக வழக்கம்போல் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகவே உள்ளது.
காங்கிரஸ் மண்டபத்தில் பாஜக திருமணம்..
இந்தத் திருமணத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் அடங்கியிருந்தது. அதாவது திருமணம் நடந்த காமராஜர் அரங்கம், காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளைக்குச் சொந்தமானது என்பதுதான் அது.
அமித்ஷா...
இதேபோல், பாஜக மாநிலத் தலைவரான தமிழிசையின் இல்லத் திருமணத்தில் பாஜகவின் முக்கிய தேசியத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. முன்னதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இந்தத் திருமணத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் டெல்லியில் முக்கிய வேலை காரணமாக அவர் இத்திருமணத்தில் பங்கேற்கவில்லை என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.