"பழம்" நழுவிப் போனது... பாமகவை கூட்டணிக்குள் இழுக்க பாஜக திட்டம்.. மறுபடியும் வருகிறார் ஜவடேகர்!
சென்னை: தேமுதிக நழுவிப் போய் விட்டது. இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இதை அது எதிர்பார்த்தே இருந்தது என்பதால் இந்த முறை பெரிய லெவலில் ஷாக் இருக்காது என்றே தெரிகிறது. இந்த நிலையில் தனது கூட்டணியை இறுதி செய்ய அடுத்த வாரம் ஜவடேகர் சென்னை வருகிறாராம்.
தேமுதிக இல்லை என்றாகி விட்டதால், இருக்கும் சில கட்சிகளை வைத்துக் கொண்டு கூட்டணியை அறிவித்து வேலையில் குதிக்கப் போகிறதாம் பாஜக.
அதேசமயம், பாமகவை கூட்டணிக்குள் இழுக்கப் போகிறார்களாம். அது வந்தால்தான் கொஞ்சமாவது கெளரவமாக இருக்கும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு. அதேசமயம், அதிமுக பக்கம் பாஜக போகலாம் என்ற பேச்சுக்களும் பலமாக அடிபடுகின்றன.
ராசியில்லாத ஜவடேகர்
ஜவடேகர் கூட்டணி குறித்து பேச்சுக்களைத் தொடங்கினாலும் தொடங்கினார், எல்லாமே ஜவ்வு மிட்டாய் போல இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.
கைநழுவிய தேமுதிக
தேமுதிகவை கடைசி வரை முயற்சித்துப் பார்த்தார் ஜவடேகர். பாஜகவும் என்னென்னவோ செய்து பார்த்தது. ஆனால் அவர் யாரிடமும் சிக்காமல் தெளிவாகத் தப்பி விட்டார்.
பாமக
தற்போது தேமுதிக, மக்கள் நலக் கூட்டணிக்குப் போய் விட்டதால், வேறு வழியில்லாமல் பாமகவின் பக்கம் திரும்பியுளளது பாஜக. ஆனால் பாமக சேருமா என்று தெரியவில்லை.
அதிமுக
அதேபோல அதிமுக பக்கமும் பாஜக போகலாம என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதெல்லாம் ஜவடேகர் சென்னை வரும்போதுதான் தெரிய வரும். அவரும் அடுத்த வாரம் சென்னை வருகிறார்.
விருப்ப மனுக்கள்
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் நான் மீண்டும் தமிழகம் செல்ல உள்ளேன். தேர்தலில் போட்டியிட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதன்படி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் முடிந்துள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். எங்கள் கூட்டணியை மக்களே அறிவிப்பார்கள்.
பாமக வருமா?
பாமக கூட்டணியில் நீடிக்கிறதா, இல்லையா என்பதை நான் சொல்லமுடியாது. அதை பாமகவிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார் ஜவடேகர்.
பயணத்தின் நோக்கம் என்னவோ!
ஜவடேகர் இதுவரை சென்னை வந்து மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளன என்பதால் இந்த முறை அவர் வரும்போது என்ன செயய்ப் போகிறார். யாருடன் பேசப் போகிறார். யாரையாவது பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.