விஜயகாந்த்தை கண்டுகொள்ளாமல் ஸ்ரீரங்கத்திற்கு பாஜக வேட்பாளரை அறிவிக்க காரணம் என்ன?
சென்னை: விஜயகாந்த் எதிர்ப்பையும் மீறி பாஜக தனது வேட்பாளரை ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் களமிறக்கியுள்ளது. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சியில் இருந்தாலும், பாஜகவின் பலத்தை சோதித்து பார்க்க ஸ்ரீரங்கத்தை களமாக்க முயன்றுள்ளது பாஜக.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனது வேட்பாளரை நிறுத்த ஆசைப்பட்டது. இருப்பினும் கூட்டணியிலுள்ள பெரிய கட்சியான தேமுதிகவுடனும் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற மரியாதைக்காக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனும் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பிராமணர் வாக்குகள்
அப்போது தேமுதிக சார்பில் வேட்பாளரை நிறுத்த ஆசைப்படுவதாகவும், அதற்கு பாஜக ஆதரவு தர வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால் பாஜக இதற்கு உடன்படவில்லை. தேமுதிகவுக்கு ஸ்ரீரங்கத்தில் செல்வாக்கு இல்லை என்பதை எடுத்துக் கூறியுள்ளனர் பாஜக தலைவர்கள். அதே நேரம் பிராமணர்கள் கணிசமாக இருக்கும் தொகுதி என்பதால், பாஜக வேட்பாளரை களமிறக்குவதே சிறந்ததாக இருக்கும். அப்போதுதான் அதிமுகவுக்கு செல்லும் பிராமணர் வாக்குகளை பிரிக்க முடியும் என்பது தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோரின் பாயிண்ட் ஆக இருந்துள்ளது.
விஜயகாந்த்துக்கு கவுரவ பிரச்சினை
பாஜகவினர் கூறுவதில் லாஜிக் இருப்பது தெரிந்தாலும்கூட, தனது வேட்பாளரரை களமிறக்காமல் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால், தேமுதிக ஒருபடி கீழே இறங்கிவிட்டதை போல ஆகிவிடுமே... தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் தேமுதிகதான் பெரிய கட்சி என்ற மாயை உடைபட்டு போகுமே என்ற ஆதங்கம் விஜயகாந்த்துக்கு இருந்துவந்தது. எனவே, இதுகுறித்து யோசிக்க வேண்டும் என்று கூறி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவிடாமல் செய்துவிட்டாராம் விஜயகாந்த்.
ஜவ்வுதான்..
விஜயகாந்த் எப்போதுமே உடனடியாக முடிவெடுக்க மாட்டார் என்பது தெரிந்த விஷயமாயிற்றே. அதேபோலத்தான், இந்த விவகாரத்திலும் ஜவ்வு போல இழுத்துக் கொண்டிருந்தார். ஆனால், வேட்பாளரை அறிமுகம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினால்தான் கவுரவமான வாக்குகளை பெற முடியும் என்ற சூழ்நிலை இருக்கும்போது, விஜயகாந்த் காலதாமதம் செய்வதை பாஜக ரசிக்கவில்லை.
அதிமுக வாக்குகளை பிரிக்க..
எனவே, கடந்த சட்டசபை தேர்தலில் மணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும், பாஜக நிர்வாகியுமான சுப்பிரமணியனை வேட்பாளராக அறிவித்தது பாஜக. ஏற்கனவே, அதிமுக சார்பில் வளர்மதி, திமுக சார்பில் ஆனந்த், மார்க்சிஸ்ட் சார்பில் அண்ணாதுரை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில ஆட்சிக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கும், மார்க்சிஸ்டுகளுக்கும் செல்லும். எனவே அதிமுகவுக்கு செல்லும் வாக்குகளை பிரிக்கவே பாஜக முயலும். குறிப்பாக பிராமண வாக்குகள் குறிவைக்கப்படும் என்று தெரிகிறது.
தேமுதிகவுக்கு செல்வாக்கில்லை..
பாஜக வேட்பாளரை அறிவித்துவிட்டாலும், விஜயகாந்த்தும் தனது கட்சி வேட்பாளரை அறிவிக்க வாய்ப்புள்ளது. யார் பெரிய கட்சி என்ற போட்டியே இதற்கு காரணமாக அமையும். ஆனால், அப்படியே தேமுதிக போட்டியிட்டாலும், பாஜகவிற்கு என்று இருக்கும் வாக்கு வங்கியில் எந்த ஓட்டையும் விழாது என்பது தமிழிசைக்கும் நன்கு தெரியும். எனவே அதிமுகவை மட்டுமே குறிவைத்து பாஜக தனது வேட்பாளரை இறக்கிவிட்டுள்ளது.