இந்திய பொருளாதாரத்தை ஐசியூவில் தள்ளியது பாஜகதான்... பணமதிப்பு நீக்கம் தவறான நடவடிக்கை.. ப.சிதம்பரம்
இந்திய பொருளாதாரத்தை அவசர சிகிச்சை பிரிவில் தள்ளியது பாஜக அரசுதான் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்திய பொருளாதாரத்தை அவசர சிகிச்சை பிரிவில் தள்ளியது பாஜகதானே தவிர, காங்கிரஸ் அல்ல. இந்த அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை தவறானதாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் கடந்த 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டின் சாதக பாதகங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைகாட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டாக இருந்தாலும் இதில் சலுகைகள் ஏதும் சேர்க்கப்படாதது மோடி அரசின் துணிச்சல் அல்ல, அதன் இயலாமை ஆகும். செய்ய வேண்டும் என்று முனைந்திருக்கிறார்கள். ஆனால் செய்ய முடியவில்லை. காரணம் இத்தகைய நிலையில் இந்திய பொருளாதாரத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள்.
உற்பத்தி அதிகரித்தால்...
எந்த ஒரு நிதி நிலை அறிக்கையையும் தொழிலதிபர்கள் விமர்சித்ததில்லை. அதுபோல்தான் மோடி அரசின் நிதி நிலை அறிக்கையையும் அவர்கள் எதிர்க்கவில்லை. விவசாய பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். உற்பத்தி அதிகரித்தால் விலை சரிந்துவிடும். இந்திய பொருளாதாரம் பல வழிகளில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
வாய்ச் சொல் வீரர்கள்
குறைந்தபட்ச விலையை இந்த மோடி அரசு கடந்த 4 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யவில்லை. பல மானியங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டது. விவசாயமே செய்ய முடியாத என்ற நிலைதான் தற்போது உள்ளது. இந்த ஒரு ஆண்டில் விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு அளவுக்கு குறைந்த பட்ச விலை தருகிறோம் என்பது வாய்ச் சொல்தான். இவர்களெல்லாம் வாய் சொல் வீரர்கள். எப்படி செயல்படுத்த முடியும்.
பொருளாதார வளர்ச்சி
குருவை சாகுபடியில் இவர்கள் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து தருவதாக கூறியதில் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்திய பொருளாதாரத்தை அவசர சிகிச்சை பிரிவில் தள்ளியது இந்த பாஜக அரசுதான். பாஜக ஆட்சி பொறுப்பேற்றபோது 6.4 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி அவர்கள் பொறுப்பேற்றவுடன்6 சதவீதமாக மாறிவிட்டது. இதிலிருந்தே தெரியவில்லையா இந்திய பொருளாதாரத்தை ஐசியூவில் தள்ளியது யார் என்று.
ஜிஎஸ்டியை கொண்டு வந்தது காங்கிரஸ்
உலகத்தில் உள்ள பொருளாதார நிபுணர்கள் யாரும் இந்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழக்க நடவடிக்கை சரி என்று சொன்னதில்லை. இது ஒரு முட்டாள்தனமாக நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி என்ற வரி நடைமுறையை முதலில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால் அதை 7 அல்லது 8 ஆண்டுகளாக முடக்கி வைத்தது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜகதான். ஆயினும் அவர்கள் ஜிஎஸ்டியை கொண்டு வந்தபோது காங்கிரஸ் ஆதரித்தது. ஆனால் அதை அமல் செய்த விதம் தவறானது என்று நாங்கள் சுட்டிக் காட்டினோம். ஜிஎஸ்டியை எதிர்ப்பது தவறு. அதை அமலாக்கிய முறையை எதிர்ப்பதுதான் சரி. பெட்ரோல் டீசல் விலையும் ஜிஎஸ்டிக்குள் வர வேண்டும்.
குறுக்கு வழியில் ஆட்சி அமைத்தது பாஜக
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தபோது 30 லட்சம் வேலைவாய்ப்புகள் என்று கூறும் பாஜக அரசு 6 சதவீதம் பொருளாதார வளர்ச்சியின்போது 70 லட்சமாக உயர்ந்ததாக கூறுவது எப்படி. பாஜக அரசின் காலத்தில் நடைபெற்ற கோவா மற்றும் மணிப்பூர் சட்டசபை தேர்தல்களில் முதலில் வந்தது காங்கிரஸ் கட்சிதான். அரசியல் சாசனபடி முதலில் வந்த கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும். ஆனால் இவர்களோ ஆளுநர்களை கையில் போட்டுக் கொண்டு குறுக்கு வழியில் ஆட்சி அமைத்துள்ளனர் என்றார் ப.சிதம்பரம்.