மோடி பிரதமராக வேண்டும்… இல்லாவிட்டால் ஜெ. பிரதமராக பாஜக ஆதரவு தர வேண்டும்: ‘சோ’
சென்னை: மத்தியில் எப்படி கூட்டணி அமைந்தாலும் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். அதில் சிக்கல் ஏற்பட்டால் ஜெயலலிதா பிரதமராவதற்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.
துக்ளக் பத்திரிகையின் 44வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநிலத்தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஆடிட்டர் குருமூர்த்தி, காங்கிரஸ் பிரமுகர்கள் கோபண்ணா, பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் ஒரே மேடையில் பங்கேற்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆண்டு விழாவில் ஆசிரியர் சோ பேசியதாவது:
ஊழலில் பிஹெச்டி
காங்கிரஸ் தோற்கடிப்படவேண்டிய கட்சி, ஊழல் இப்போது பல கட்சிகளைப் பொறுத்தவரை சமம் என்றாகிவிட்டது. ஆனால் சில கட்சிகள் ஆரம்பப்பள்ளி நிலையில் இருக்கின்றன. திமுகவைப் போன்ற சில கட்சிகள் ஊழலில் பிஹெச்டி வாங்குகின்ற அளவிற்கு வந்துவிட்டன.
ஜெயலலிதா ஆலோசனை
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் மிகவும் நெருக்கமானவன் என கற்பனை செய்துகொண்டு, ‘அவரிடம் அதை சொல்லவேண்டும், இதை சொல்லவேண்டும்' என கேள்வி கேட்கின்றனர். அந்த அளவுக்கு நான் நெருக்கமானவன் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஜெ. சிறந்த நிர்வாகி
முதல்வர் ஜெயலலிதாவின் உழைப்பு, நிர்வாகத் திறன் குறித்து சந்தேகமே வேண்டாம். முதல்வராக நிர்வாகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் அவருக்கு உள்ளது. அவர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்.
திமுக தோற்கவேண்டும்
தமிழகத்தில் யார் யார் கூட்டணி சேரப்போகிறார்கள் எனத் தெளிவாகவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி அமைவதற்கு அந்த இரு கட்சிகளுமே ஆர்வம் காட்டவில்லை.
திமுக கூட்டணி தோற்றால்தான் தமிழக அரசியலில் தெளிவு பிறக்கும். தேமுதிகவால் பெரிய அளவில் பலன் இருக்காது.
காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா?
மீண்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமையுமா, தேமுதிக யாருடன் சேரும், தனித்துப் போட்டியிடும் தைரியம் காங்கிரஸுக்கு உள்ளதா என்பதெல்லாம் தெரியவில்லை.
3-வது அணியா?
மூன்றாவது அணி சாத்தியமல்ல. காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவு இல்லாமல் மத்தியில் யாராலும் ஆட்சி அமைக்கமுடியாது. பல கட்சிகளால் ஒரே அணியில் இணையமுடியாது. எனவே 3-வது அணி சாத்தியமற்றது.
மோடி பிரதமராகவேண்டும்
எப்படி கூட்டணி அமைந்தாலும் நரேந்திரமோடி பிரதமராக வேண்டும். அவர் பிரதமராக முடியாத சூழல் உருவானால், ஜெயலலிதா பிரதமராவதற்கு பாஜக ஆதரவளிக்க வேண்டும். இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
தமிழகம் முன்னேறுகிறது
தமிழகத்தில் கடந்த தேர்தலில் மின் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்தது. இப்போது மின்மிகை மாநிலம் என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது.
சட்டம் ஒழுங்கில் கவனம்
தீவிரவாதிகளைப் பிடித்தது, வங்கிக் கொள்ளையர்களை என்கவுன்ட்டர் செய்தது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது ஆகியவை அதிமுக அரசின் சாதனைகளாகும். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அரசு மேலும் முனைப்பு காட்டவேண்டும். டிஜிட்டல் பேனர்கள் குறைய வேண்டும்.
ஆம் ஆத்மி
ஆம் ஆத்மிக்கு வாக்களித்து ஏமாற வேண்டாம். டெல்லியில் 72 சதவீத மக்கள் அக்கட்சிக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நபர்கள் அக்கட்சியில் உள்ளனர்.
கெஜ்ரிவால் பதவி ஆசை
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஊழல் செய்ததற்கு ஆதாரமாக 360 பக்க ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய கெஜ்ரிவால், தற்போது மற்றவர்களிடம் ஆதாரம் கேட்கிறார். பதவி ஆசையால் காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். காங்கிரஸ் என்றாலே ஊழல் என்றாகி விட்டது. ஊழலில் காங்கிரஸ் பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளது என்றார் சோ.
தொப்பி அணிந்த சோ
மேடையில் பேசும் போது திடீரென்று சோ வெள்ளை நிற குல்லாய் ஒன்றை அணிந்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. உடன் நான் ஆம் ஆத்மியல்ல ஆமாம் ஆத்மி என்றார்.
மதுக்கடைகளை மூட முடியாது
வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்த சோ, தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை ஒழுங்கு படுத்த முடியுமே தவிர ஒரு போதும் மூட முடியாது என்றார்.