ஓபிஎஸ் இணையாவிட்டால்.. பாஜக கையில் வேறு "லகான்".. 'கொங்கு' அமைச்சர்கள் 'கிலி'
சென்னை: பாஜகவில் ஓபிஎஸ் இணைய முடியாத நிலையில் தமிழகத்தில் அதிரடி அரசியல் மாற்றங்களை அரங்கேற்ற பாஜக வியூகம் வகுத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோலோச்சும் கொங்கு அமைச்சர்கள் பலரும் அதிர்ந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் தற்போதைய பாஜக தலைவர்களை வைத்துக் கொண்டு ஒரு படிகூட முன்னேற முடியவே முடியாது என உளவுத்துறை அறிக்கை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதனால் ஓபிஎஸ் கோஷ்டியை வளைத்துப் போட்டு முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சிக்கிறது பாஜக.
தமிழகத்தில் புஸ்வானம்
வழக்கமாக மற்ற மாநிலங்களில் பாஜக பின்பற்றும் இந்த வியூகம் தமிழகத்தில் புஸ்வானமாகிவிட்டது. சசிகலாவை எதிர்க்கும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் யாருமே பாஜகவை ஒரு கட்சியாகவே பார்க்கவில்லை. இதனால் பாஜகவில் சேருவதற்கு பதிலாக சசிகலா குடும்பத்திடம் சரணடையலாம் என்கிற எண்ணமே ஓபிஎஸ் அணியிடம் இருக்கிறது.
மிரட்டும் பாஜக
அதேநேரத்தில் தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க தாம் மட்டுமாவது பாஜகவில் இணைந்துவிடலாம் என நினைக்கிறாராம் ஓபிஎஸ். ஆனால் பாஜகவோ வந்தா கோஷ்டியோட வாங்க... இல்லைன்னா நாங்க சொல்றதை செய்யுங்க என மிரட்டிக் கொண்டிருக்கிறது.
ஓபிஎஸ் துணை முதல்வர்
ஓபிஎஸ் கோஷ்டி பாஜகவில் இணையாத நிலையில் பிளான் பி-ஐ அதிரடியாக அரங்கேற்ற வியூகம் வகுத்துள்ளதாம் பாஜக. அதிமுகவின் இரு கோஷ்டிகளையும் இணைக்க வைத்து ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவியை கொடுப்பது; அத்துடன் முக்கிய இலாகாக்களை ஓபிஎஸ்ஸிடம் கொடுத்து எடப்பாடியை டம்மி முதல்வராக்குவது முதல் நடவடிக்கையாம்.
கொங்கு அமைச்சர்களுக்கு கடிவாளம்
இப்படி செய்கிற போது தனிக்காட்டு ராஜாக்களாக வலம் வரும் கொங்கு அமைச்சர்களுக்கு கடிவாளம் போட முடியும்; தங்களது கட்டுப்பாட்டுக்குள் அவர்களைக் கொண்டுவர முடியும் என்பது இரண்டாம் திட்டமாம். லோக்சபா தேர்தல் வரை இந்த பினாமி ஆட்சியை நீடிக்க வைத்துவிட்டு தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை கொடுத்து கூட்டணி வைப்பது என்பதுதான் பாஜகவின் வியூகம் என்கின்றன டெல்லி தகவல்கள்