'டார்கெட்' கொங்கு மண்டலம்.... 25 ப்ளஸ் அதிமுக எம்.எல்.ஏ.க்களை வளைக்கிறது பாஜக?
சென்னை: அதிமுகவின் 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை பாரதிய ஜனதா கட்சி ரகசிய பேச்சுவார்த்தைகள் மூலம் வளைத்திருப்பதாக வெளியான தகவலால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் காலூன்றுவதற்கு அம்மாநிலங்களின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது பாஜக. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பார்முலாவைத்தான் நடைமுறைப்படுத்தி வருகிறது பாஜக.
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அதிமுகவின் கணிசமான எம்.எல்.ஏ.க்களை இழுத்துப் போடும் முயற்சிகளை ரகசியமாக மேற்கொண்டு வருகிறது பாஜக.

கொங்குமண்டலம்
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில்தான் அதிமுக செல்வாக்காக இருக்கிறது. அங்கே பாரதிய ஜனதாவும் தம்மை நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது.

தம்பிதுரை
அதனால்தான் தொடக்கத்தில் பொறுப்பு முதல்வராக தம்பிதுரையை பாஜக கொண்டுவர முயற்சித்தது. இதை அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலா தரப்பு முற்றாக நிராகரித்தது.

ஓபிஎஸ்
இதன்பின்னர் ஜெயலலிதாவின் துறைகள் யாரிடம் ஒப்படைப்பது என்ற பிரச்சனையில் சசிகலா தரப்பு எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தியது. ஆனால் மத்திய அரசோ ஓ.பன்னீர்செல்வத்தை தமது சாய்ஸாக வைத்து வென்றது.

25 ப்ளஸ்
அத்துடன் ஓய்ந்துவிடாத பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போடும் வழக்கமான பாணியை கையில் எடுத்துள்ளது. கொங்கு மண்டலம் மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சுமார் 25-க்கும் மேற்பட்டவர்களை பாஜக இதுவரை வளைத்துப் போட்டிருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

வழக்குகளை முன்வைத்து
இவர்களில் சிலர், நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டியே வளைக்கப்பட்டிருக்கின்றனராம். பாஜகவின் வலையில் விழுந்தவர்களில் மாவட்டங்களில் நீண்டகாலம் செல்வாக்காக இருந்தவர்களும் அடக்கமாம். இந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது என்கின்றன பாஜக வட்டாரங்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications