ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி- தே.மு.தி.க. போட்டியில்லை!
சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவும் களத்தில் குதித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு 4 முனை போட்டி நிலவுகிறது. ஸ்ரீரங்கத்தில் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க. போட்டியிடவில்லை.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வளர்மதியும், தி.மு.க. சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஆனந்தும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அண்ணாதுரையும் போட்டியிடுகின்றனர்.
இதில் வளர்மதி, ஆனந்த் ஆகியோர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து தேர்தல் பணியையும் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் அடங்கிய 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தி.மு.க. சார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், வெளிமாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் அடங்கிய 83 பேர் கொண்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு மற்றும் கிராமங்களில் தங்கியிருந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் என்று தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறி வந்தார்.
ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. இதனை ஏற்கவில்லை. தே.மு.தி.க. தலைமையில்தான் ஸ்ரீரங்கம் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் அவர் உறுதியாக கூறினார்.
இதையடுத்து கடந்த 21-ந் தேதி விஜயகாந்த்தை தமிழிசை சவுந்திரராஜன் சந்தித்து பேசினார். அப்போதும் உடன்பாடு எதுவும் ஏற்பட வில்லை.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும். எந்த கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்பது இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றார். ஆனாலும் இந்த தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக இருந்தது.
இதற்கான ஆலோசனைகளை அக்கட்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
அப்போது ஸ்ரீரங்கம் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கு விஜயகாந்த் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை விஜயகாந்தும் ஏற்றுக் கொண்டதால் இன்று வேட்பாளராக ஆகஸ்போர்டு சுப்பிரமணியனை பாரதிய ஜனதா அறிவித்துள்ளது. இத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்து பா.ஜ.க.வை ஆதரிக்கிறது.
இத்தேர்தலில் போட்டியிடப் போவதும் இல்லை.. யாரையும் ஆதரிக்கப் போவதும் இல்லை என்று ம.தி.மு.க, பா.ம.க. ஏற்கனவே அறிவித்துவிட்டன. போட்டியிடுவது குறித்தோ ஆதரவு தருவது குறித்தோ காங்கிரஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
தற்போதைய நிலையில் ஆளும் அண்ணா தி.மு.க., தி.மு.க, மார்க்சிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா என 4 முனைப் போட்டியை எதிர்கொண்டிருக்கிறது ஸ்ரீரங்கம் தொகுதி.