தேர்தல் கூட்டணிக்கு நாங்க தான் தலைமை... இப்போதே துண்டு போட்டு வைக்கும் தமிழிசை...
சென்னை: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமையும் என்றும் அதற்கு பா.ஜ.க தலைமையேற்கும் என்றும் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜனதா அரசின் ஓராண்டு நிறைவு விழா சென்னையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அலுவலக அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சாதனை விளக்க படக்காட்சியை இல.கணேசன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது...
சாதனைகள் செய்த பா.ஜ.க.
மத்தியில் 10 ஆண்டுகளாக நடந்த மக்கள் விரோத காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டி பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் மிகப்பெரிய சாதனைகளை பா.ஜனதா அரசு செய்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதனைத் திட்டங்கள்
முத்ரா வங்கி, தமிழகத்திற்கு வரவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை, செல்வமகள் திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு, வங்கி கணக்கு வைத்திருக்கும் சாதாரண மக்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம், பென்சன் திட்டம் என்ற பல திட்டங்களை சாதனையாக சொல்ல முடியும்.
விமர்சனமாகும் வெளிநாட்டுப்பயணம்
மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை விமர்சிக்கிறார்கள். ஆனால் அவரது வெளிநாட்டு பயணத்தை நாட்டு மக்கள் வெளிப்படையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பல திட்டங்களை கொண்டு வந்தது போன்றவற்றை மக்கள் அறிவார்கள். குறிப்பாக உலக நாடுகளிடையே இந்தியாவின் கவுரவம் உயர்த்தப்பட்டுள்ளது.
ராகுல் எங்கிருந்தார்?
ஆனால் 57 நாட்களாக ராகுல் காந்தி எங்கிருந்தார் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. யார் பிரதமராக வரவேண்டும் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 66 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 10 சதவீதத்துக்கும் குறைவாகவே ராகுல் காந்திக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
மோடியின் செல்வாக்கு உயர்வு
இதன் மூலம் மோடியின் செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருவதை அறிய முடியும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை விவசாயிகளுக்கு எதிரானது என்று தவறான முறையில் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் இந்த சட்டம் ஒரு போதும் விவசாயிகளைப் பாதிக்காது. பல தொழிற்சாலைகள் உருவாகும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
“டாஸ்மாக்” ஒழிய வேண்டும்
கடந்த 8 மாதமாக தமிழகத்தில் முடங்கி கிடந்த அரசு நிர்வாகம் இனியாவது வேகமாக செயல்பட வேண்டும். அடுத்த ஒரு ஆண்டில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் கடையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அது பற்றி அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு வாழ்த்து ஏன்?
அதிகாரிகள் மீது ஒப்பந்ததாரர்கள் புகார் கூறினார்கள். அது பற்றி நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது வேதனையானது. தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலை வேரூன்ற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது. அதன்படிதான் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தோம்.
திராவிட கட்சிக்கு மாற்று பா.ஜ.க. தான்
தி.மு.க. தலைவர் கலைஞர் சகோதரி மரணம் அடைந்ததை அறிந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று துக்கம் விசாரித்தார். மு.க.ஸ்டாலின் அவரது சகோதரர் மகன் திருமணத்துக்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் நேரில் அழைத்ததையும் ஆரோக்கியமான அரசியலாக கருதுகிறோம்.
தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான திட்டங்களை முன் வைத்து திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சியாக வளர்ந்து வருகிறோம்.
பா.ஜ.க. தலைமையில் வலுவான கூட்டணி
2016 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வலுவான கூட்டணியாக அமையும். வருகிற 28-ந்தேதி ஆர்.கே.நகரில் பா.ஜனதா அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், அகில இந்திய செயலாளர் முரளி தர ராவ் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.