''ஆளே இல்லை, எப்படி டீ ஆத்துறது?''… பாஜகவுக்கு பிரச்சாரமே செய்யாமல் திரும்பிய எஸ்.வி.சேகர்!
வேலூர்: வேலூரில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போன எஸ்.வி. சேகருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. வெயில் காரணமாக கூட்டம் வராமல் போனதால் விருட்டென்று காரில் ஏறி ஹோட்டல் ரூமிற்குத் திரும்பினார்.
கட்சித் தொண்டர்கள் சிலர் சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அவர் கேட்காமல் அறைக்கு திரும்பினார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
காங்கிரஸ் மீது வெறுப்பு
தற்போது நடைபெற உள்ள தேர்தலை தி.மு.க. அ.தி.மு.க.வினருக்கு இடையே நடக்கும் தேர்தல் போல பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளனர். இது காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் இடையே நடக்கும் தேர்தல். 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் பெரிய வெறுப்பை வைத்துள்ளனர். தேர்தலில் இதை காட்டுவார்கள்.
30 சீட் கூட கிடைக்காது
இந்திய அளவில் காங்கிரசுக்கு 30 சீட் கூட கிடைக்காது. மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று பாஜக முடிவு செய்யும் முன்னரே பொதுமக்களே முடிவு செய்துவிட்டனர். மோடி பிரதமராவது மக்கள் விருப்பமாக உள்ளது.
அமெரிக்கா சம்மன்
சீக்கியர்கள் படுகொலை சம்பந்தமாக சோனியா காந்திக்கு அமெரிக்கா சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியால்தான் அதிக மத கலவரங்கள் நடந்துள்ளது. வாஜ்பாய் ஆட்சியில் இந்தியாவில் கலவரங்கள் நடக்கவில்லை.
பாஜகவிற்கு 300 இடங்கள்
எந்த கட்சியையும் சாராத 70 சதவீத வாக்காளர்கள் உள்ளனர். இதில் 60 சதவீதம் பேர் மோடி பிரதமராக வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர். பா.ஜனதா 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
விஜயகாந்திற்கு வரவேற்பு
மோடி பிரதமரானால் இலங்கை பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். விஜயகாந்த் பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் மற்ற அரசியல் கட்சிக்கு பிரசாரம் செய்யும் நடிகர்கள் அவரை தரக்குறைவாக பேசுகின்றனர் என்று எஸ்.வி. சேகர் கூறினார்.
பாஜகவில் பொறுப்பு
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எஸ்.வி.சேகர், பிரசாரக் குழு மாநில செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டார். கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மார்ச் 31-ஆம் தேதி இந்த பொறுப்புக்கு எஸ்.வி.சேகரை நியமித்து கையெழுத்திட்டுள்ளார்.
தாமதமாக கிடைத்த கடிதம்
ஆனால் அந்தக் கடிதம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் எஸ்.வி.சேகருக்கு கிடைத்ததாகத் தெரிகிறது. அதன் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்ள வந்த போது, கூட்டத்தில் அவருக்கு பேச வாய்ப்பளிக்காமல் வேட்பாளர்களும், பிற தலைவர்களும் மட்டும் பேசியதாகத் தெரிகிறது.
நான் காட்சிப் பொருளா
பிரசாரக் கூட்டங்களில் தன்னை ஒரு காட்சிப் பொருளாக மட்டும் நிறுத்தி வைத்து விட்டு, பேச வாய்ப்பளிக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி எஸ்.வி.சேகர் வருத்தப்பட்டார். இந்த நிலையில் பிரசாரத்திற்கு போன இடத்தில் கூட்டமில்லை என்று கூறி அறைக்கு திரும்பிய கதையும் நடந்துள்ளது.