ரயில் பெங்களூரில் புறப்படும்போதே வெடிகுண்டு வைக்கப்பட்டது காவல்துறை தகவல்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வெடித்த குண்டுகள் பெங்களூரில் ரயில் புறப்பட்டிருக்கும்போதே வைக்கப்பட்டிருக்கலாம் என்று சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெங்களூர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்தபோது, அடுத்தடுத்து இரு குண்டுகள் ரயில் பெட்டிக்குள் வெடித்தன. இதில் சுவாதி என்ற பெண் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து விசாரித்து வரும் தமிழக சிபிசிஐடி போலீசார் பெங்களூருக்கு விசாரணை நடத்த வந்துள்ளனர். ஆந்திர மாநிலத்துக்கும் ஒரு டீம் சென்றுள்ளது. இதனிடையே பெயர் தெரிவிக்க விரும்பாத விசாரணை குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கர்நாடகாவிலுள்ள ஸ்லீப்பர் செல்களை பயன்படுத்தி வெடிகுண்டை தயாரித்திருக்க வாய்ப்புள்ளது.
வெடிகுண்டும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த டைமரும், பெங்களூரில் ரயில் புறப்படும்போதே வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதே ரயிலில் குற்றவாளியும் பயணித்தானா என்பதை உறுதி செய்ய பெங்களூர் ரயில் நிலையத்திலும், சென்ட்ரலிலுமுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்து வருகிறோம். இதனிடையே தேசிய பாதுகாப்பு படையின் ஒரு குழு நேற்றிரவு சென்னை வந்துள்ளது.