ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேர்தலை மனதில் வைத்து செயல்படுவது தவறு - நீதிபதி சந்துரு கருத்து
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி விவகாரத்தில் தேர்தலை மனதில் வைத்து செயல்படுவது தவறானது என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
பொங்கல் புத்தகத் திருவிழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை புத்தகங்கள் இங்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், மற்ற தினங்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
இந்த புத்தகத் திருவிழாவை, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி தொடக்கி வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்துரு கூறுகையில், திறமையான சட்டம் இயற்றப்படுமானால், ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்புள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை சட்டப்பூர்வமாக நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உணர்வுபூர்வமாக இல்லாமல் சட்டப்பூர்மமாக முடிவு எடுக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஒரு நாடகம் போல் உள்ளதாகவும் சந்துரு விமர்சித்துள்ளார். தேர்தலை மனதில் வைத்து எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்படுவது தவறு என்றும் அவர் கூறினார்.