சென்னையில் மேலும் ஒரு உடல் உறுப்பு தானம்… 4 பேருக்கு புது வாழ்வு கிடைத்தது!
சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர் வேதா தெருவைச் சேர்ந்தவர் மாணிக்க வாசகர். இவரது மகன் விவேகானந்தன் (26). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
பணிச்சுமையால் உயர் ரத்த அழுத்தத்துக்குள்ளான விவேகானந்தன் கடந்த சில தினங்களுக்கு முன் மயங்கி விழுந்தார். இதில் உடல் நிலை பாதித்து கடந்த 10-ந்தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்தபோது, விவேகானந்தனின் மூளையில் ரத்தம் உறைந்திருப்பது தெரியவந்தது. திடீரென கோமா நிலைக்கு சென்றார் விவேகானந்தன்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வியாழக்கிழமை மாலையில் மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால் வேதனையில் தவித்த விவேகானந்தனின் பெற்றோர் அவரது உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
இதையடுத்து நேற்று இரவு விவேகானந்தனின் இதயம், கல்லீரல், சிறு நீரகங்கள் அவரது உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து இதயம் ஆம்புலன்ஸ் மூலம் அடையாறு மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக இதயம் செயலிழந்த ஒருவருக்கு அந்த இதயம் பொருத்தப்பட்டது.
கல்லீரல் குளோபல் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கும், இரு சிறு நீரகங்களும் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருவருக்கும் பொருத்தப்பட்டது.
விவேகானந்தனின் உயிரற்ற உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் உறுப்புகள் மூலம் 4 பேருக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது.
கடந்த தினங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட லோகநாதன் என்பவரின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.