தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து
தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.
கன்னியாகுமரி: 13வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சருடன் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க ஆயிரத்து 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். எனினும், இந்த தொகை போதாது என அதிருப்தி வெளியிட்ட தொழிற்சங்கங்கள், ஏற்கனவே திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று நடத்தி வருகின்றன.
இந்நிலையில், பேருந்து போக்குவரத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக அரசு தரப்பில் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, இன்று காலை கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் தற்காலிக ஓட்டுநரைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. அப்படி தற்காலிக ஓட்டுநர் ஒருவர் பேருந்தை இயக்கிய போது பேருந்து விபத்துக்குள்ளானது.
தற்காலிக ஓட்டுநர் அரசுப் பேருந்து பணிமனையில் இருந்து பேருந்தை வெளியே எடுத்து வந்த போது அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தப் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.