நடுரோட்டில் தீப்பிடித்த பேருந்து – 43 பயணிகள் உயிர் தப்பினர்!
நெல்லை: நெல்லை கயத்தாறில் நடுரோட்டில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 43 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்தில் இருந்த உடைமைகள் எரிந்து நாசம் ஆனது.
கோவையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அரசு விரைவு பேருந்து ஒன்று புறப்பட்டு நாகர்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 43 பயணிகள் இருந்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்த வர்க்கீஸ் பேருந்துசை ஓட்டி வந்தார்.
இந்த பேருந்து அதிகாலை 2.40 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே சென்று கொண்டு இருந்தது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது பேருந்துசில் இருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த டிரைவர் வர்க்கீஸ் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பேருந்தினை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். பேருந்தின் இஞ்சின் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே டிரைவரும், கண்டக்டரும் பேருந்துசுக்குள் ஏறி அங்கு தூங்கிக் கொண்டு இருந்த பயணிகளை சத்தம் போட்டு தட்டி எழுப்பினர். "பேருந்து தீப்பிடித்து எரிகிறது, கீழே இறங்குங்கள்" என்று கூறினர். சத்தத்தை கேட்டதும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர்.
அப்போது தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கியது. பயணிகள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு, தப்பித்தால் போதும் என்று தங்களது பொருட்களை பேருந்திலேயே விட்டு, விட்டு அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடினர்.
ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு இறங்கினர். சிலர் பேருந்தின் ஜன்னல் வழியாக இறங்குவதற்கு கண்ணாடிகளை திறக்க முயன்றனர். ஆனால் கண்ணாடிகள் இறுகிய நிலையில் இருந்ததால் திறக்க முடியவில்லை.
பின்னர் வாசல் வழியாக இறங்கியபோது புகை மூட்டத்தால் சில பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆனாலும் பேருந்தில் இருந்த 43 பயணிகளும் கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. பேருந்துக்குள் இருந்த பணம் உள்ளிட்ட பயணிகளின் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசம் ஆனது.
நடுரோட்டில் பேருந்து எரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர்.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். அப்போது பேருந்து முழுவதும் தீயில் எரிந்து எலும்பு கூடு போல் காட்சி அளித்தது. பேருந்தில் வந்த பயணிகள் அனைவரையும் அதிகாரிகள் வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தங்களது கண் முன்னால் உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்ததைப் பார்த்த பயணிகள் பரிதவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் தீப்பிடித்து எரிந்த பேருந்தினை அங்கு இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரமைக்கப்பட்டு, வாகனங்களை அந்த வழியாக செல்வதற்கு போலீசார் அனுமதித்தனர்.