போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம்... தமிழகம் முழுவதும் பயணிகள் கடும் அவதி
சென்னை: அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இரண்டாவது நாளாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை,திருச்சி மண்டலங்களில் இருந்து 25 சதவிகித அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று திடீர் என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வரும் போராட்டத்தல் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 22 ஆயிரம் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு நாளைக்கு 2 கோடியே 15 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் பேருந்துப் பயணத்தை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், சென்னை எம்.டி.சி., கோவை, கும்பகோணம், மதுரை, சேலம், நெல்லை, விழுப்புரம் மற்றும் எஸ்.ஈ.டி.சி. ஆகிய எட்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ், 20 மண்டலங்களும், 280 பணிமனைகளும் உள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 22 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் மட்டும் 3,506 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சிற்றுந்துகளின் எண்ணிக்கை 200; குளிர்சாதனப் பேருந்துகள் 100 ஆகும். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை 10,500. மாவட்டங்களை தாண்டி மொத்தம் 9,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு, 900 விரைவுப் பேருந்துகளும் 2 ஆயிரம் மாற்றுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சிற்றுந்து, தொலைதூர பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 29 ஆம் தேதி (இன்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம், தமிழக அரசு சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலகத்தில் கடந்த 26 ஆம் தேதி அரசு அதிகாரிகள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து, 2 ஆம் கட்ட சமரச பேச்சுவார்த்தை கடந்த 27 ஆம் தேதி தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு துணை ஆணையர் யாஸ்பீன் பேகம் தலைமையில் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து, திட்டமிட்டப்படி 29 ஆம் தேதி (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
ஆனால், திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாக, நேற்று அதிகாலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு போக்குவரத்து பணிமனை முன்பும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் ஈடுபடாததால், அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களை கொண்டு பேருந்துகளை இயக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டு அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.
அள்ளிய கூட்டம்
சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கிருந்து சென்னை திரும்ப முடியாமல், பேருந்து நிலையங்களில் தவித்தனர்.
ஆட்டோ, கால்டாக்ஸி
சென்னையில் மாநகர பேருந்துகள் அதிக அளவு ஓடாததால் பொதுமக்கள் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களை நாடினர். இதனால் அதிக அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. எவ்வளவு கட்டணம் கொடுத்தாவது வீடு திரும்பவேண்டும் என்று முடிவு செய்து பயணம் செய்தனர்.
மின்சார ரயில்கள்
பேருந்துகள் குறைவான அளவே இயக்கப்பட்டதால் பயணிகள் மின்சார ரயில்களை நாடினர். இதனால் மின்சார ரயில்களில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்பட்டது.
விருதுநகரில் அவதி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஞாயிறுக்கிழமையான நேற்று இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்ல வந்த பயணிகள் பேருந்துகளுக்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர். எனவே ஒரு சில பேருந்துகள் மட்டுமே விருதுநகர், சிவகாசி, சாத்தூர் இடையே இயக்கப்பட்டது. அதுவும் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
மதுரையில் பாதிப்பில்லை
மதுரையில் பேருந்துகள் முழுமையாக இயங்காவில்லை ஆனாலும் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை, மின்பஸ், ஆட்டோக்கள் பொதுமக்களுக்கு கை கொடுத்து வருகின்றன.
மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் பேருந்து பணிமனைகளில் நேரில் ஆய்வு செய்ததும் 50% பேருந்து தான் இயங்குகிறது.
சுற்றுலாதலங்களில் சிரமம்
குமரி மாவட்டத்தில் 800 பேருந்துக்கு பதில் 250 பேருந்துகளே இயக்கப்படுகின்றனர். குன்னூரில் 65 பேருந்துகளுக்கு பதில் 10 பேருந்துகளும், கோத்தகிரியில் 50 பேருந்துகளுக்கு பதில் 10 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், கோத்தகிரி, குன்னூருக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், அங்குள்ள பொதுமக்களும் பெரும் சிரமப்பட்டனர்.
தற்காலிக ஓட்டுநர்கள்
இதேபோல், விருத்தாசலத்தில் 10 பேருந்துகள், திட்டக்குடியில் 5 பேருந்துகள், மதுராந்தகத்தில் 10 பேருந்துகளும், திருச்சி, ஆத்தூர் பணிமனையில் இருந்து 40 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளும் பயிற்சி மற்றும் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து இயக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பணிமனையில் இருந்தும் 293 அரசு பேருந்துகளும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கம்
அமைச்சர், கலெக்டர் ஆய்வு
பேருந்துகளை இயக்க மாநில அரசும் போக்குவரத்துறை அமைச்சரும் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் தவிர தற்காலிகமாக போக்குவரத்து ஊழியர்களைக் கொண்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பேருந்துகள் மீது கல்வீச்சு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதேபோல், தென்காசியில் 2 அரசு பேருந்துகள் மீதும், திண்டுக்கல்லில் 2 பேருந்துகள் மீதும், சேலத்தில் இருந்து பெங்களூரு, திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தது.
கோவையிலிருந்து நேற்று இரவு 9.15மணிக்கு தனியார் நூற்பு ஆலை வழியாக செங்கோட்டை நோக்கி அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து ஓன்று சென்றுக் கொண்டிருந்தது.அப்போது இரண்டுசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2மர்மநபர்கள் பேருந்தின் முன்பக்க கண்ணாடிமீதும்,நடத்துனர் பக்கம் உள்ள கண்ணாடி மீதும் கல்வீசி தாக்கினர்.இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி கல்வீச்சில் உடைந்தது.
ஓட்டுநருக்கு காயம்
இதில் பேருந்து ஓட்டுனர் எட்வர்ட் என்பவரின் வலதுகைதோள்பட்டையில் காயம் ஏற்பட்டது, இதுகுறித்து நடத்துனர் கோவை அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.அதனைத்தொடர்ந்து போலீசார்,மருத்துவர் உதவியுடன் விரைவாகவந்து ஓட்டுனருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.இந்த கல் வீச்சில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்ப்படவில்லை.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
பணிபுரியும் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரும், போக்குவரத்துத்துறை அமைச்சரும் எச்சரிக்கை விடுத்தனர்.