போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: தமிழகம் முழுக்க பஸ் போக்குவரத்து முடங்கியது
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 8 கோட்டங்கள் உள்ளன. சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்குகின்றன. இதில் டிரைவர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டிய 13வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தது. இதனால் போராட்டத்தில் குதிக்க போவதாக தமிழக அரசுக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக கடந்த மார்ச் 7 மற்றும் மே 4ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள பணிமனை வளாகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள நிதி பலன்களை வழங்க வேண்டும் என்பது உட்பட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15ம் தேதி (இன்று) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் உள்பட 10 தொழிற்சங்கங்கள் எச்சரித்தன.
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இந்த வாரத்தில் மட்டும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
நேறர்று போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசுஇறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக கூறி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் இன்று போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை, நாகர்கோயில், சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பலமாவட்டங்களிலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லையில் சுமார் 40 சதவீதம், திண்டுக்கல்லில் 30 சதவீதம் அளவுக்கு பஸ்கள் இயங்குகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் 15 சதவீத பஸ்கள் மட்டும் இயங்குகின்றன.
கோபிச்செட்டிபாளையம், அம்பாசமுத்திரம் பகுதிகளில் பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.