நெல்லை, தூத்துக்குடி புதிய மேயரை தேர்ந்தெடுக்க செப். 18 ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்
சென்னை: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் செப் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த விஜிலா சத்யானந்த், தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்த சசிகலாபுஷ்பா இருவரும் கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகிவிட்டனர். இதனால் அவர்கள் இருவரும் மேயர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளின் மேயர் பதவி காலியாக இருந்தது அந்த இடங்களுக்கு இடைத் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தெடர்பாக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகள் மற்றும் சங்கரன் கோவில், ராமநாதபுரம் நகராட்சிகள் உள்பட ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 6.8.2014 முதல் துவங்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதிநாள் 13.8.2014 தேர்தல் 18.9.2014 அன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணைய செய்தி குறிப்பு தெரிவிக்கிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.